ரூ.1 லட்சம் கொடுங்க.. பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்த நீதிபதிக்கு, ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருவாரூர் மாவட்டம் குடவாசல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய பெண் ஊழியர் மறுமணம் செய்தார். அவருக்கு மகப்பேறு விடுமுறை வழங்க நீதிபதி மறுத்தார். அதனை எதிர்த்து அந்த அலுவலக உதவியாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் மகப்பேறு விடுப்பு பெற திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், அலுவலக உதவியாளருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க குடவாசல் நீதிபதிக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் பெண் ஒருவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கடந்த 2020 ஜனவரி மாதம் 28 ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த பெண் ஊழியருக்கும், இன்னொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அந்த நபர், பெண் ஊழியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்தார். அதன்பிறகு திருமணத்துக்கு மறுத்துள்ளார். போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்த பிறகு பெண் ஊழியரை அவர் திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து நடந்தது.
இதற்கிடையே தான் பெண் ஊழியர் கர்ப்பமானார். மகப்பேறு விடுப்பு கோரி அவர் தான் பணியாற்றும் நீதிபதியிடம் விண்ணப்பம் செய்தார்.
ஆனால் அந்த நீதிபதி அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்துவிட்டார். இதற்கு 3 காரணங்களை அவர் கூறினார். ஒன்று திருமணத்தை முறைப்படி பதிவு செய்யவில்லை. 2-வது காரணம் போலீசில் பதிவு செய்த எஃஐஆர்-யை திருமணத்துக்கான சான்றாக கருத முடியாது. 3 வது காரணம் என்னவென்றால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதாக சந்தேகம் தெரிவித்து அவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக நீதிமன்ற பெண் அலுவலக உதவியாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது பெண் ஊழியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‛‛‛‛கணவரை இழந்த பெண் என்பதால் மறுமணத்தை கோவிலில் செய்தார். அதை பதிவு செய்யவில்லை'' என்று கூறினார். அதோடு திருமணம் நடந்ததற்கான போட்டோ மற்றும் அழைப்பிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்ரமணியன், ஜி அருள் முருகன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது மகப்பேறு விடுப்புக்கான விண்ணப்பத்தை திருப்பி அனுப்பிய உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். அதோடு பெண் அலுவலக உதவியாளருக்கு மகப்பேறு விடுப்பு வழங்காமல் இருந்ததை நீதிபதிகள் கண்டித்தனர்.
‛‛இது மனிதாபிமானமற்ற செயல். நாட்டில் Live In Relationship-யையே உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ள நிலையில் இப்படியான செயல் ஏற்கத்தக்கது அல்ல. திருமணமான பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு பெற திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
நீதித்துறையில் உள்ளவர்கள் தங்களை சீர்த்திருத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் நடைமுறைக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக வேண்டிய இது'' என்று கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர். இந்த நிவாரணத்தை அடுத்த 4 வாரங்களில் பெண் அலுவலக உதவியாளருக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications