குடிசைகள் இல்லா நகரமாகும் சென்னை.. 9 இடங்களில் ரூ.556.60 கோடியில் உருவாகும் அபார்ட்மெண்ட்கள்
சென்னை: தமிழ்நாட்டில் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் 9 திட்டப்பகுதிகளில்ரூ.556.60 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
சென்னை நகருக்கான மூன்றாவது பெருந்திட்டம் தயாராகிறது என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். 2031ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன் ஒருபகுதியாக சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ.556.60 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில்ரூ.75.95 கோடியில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, திருவிகநகர் தொகுதி பெரியார் நகர் திட்டப்பகுதியில்ரூ.81.64 கோடியில் 448 புதிய குடியிருப்பு, வில்விவாக்கம் தொகுதி காந்தி நகர் திட்டப்பகுதியில்ரூ.83.50 கோடியில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, எழும்பூர் வேம்புலியம்மன் பகுதியில்ரூ.32.62 கோடியில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
ஆயிரம் விளக்கு தொகுதி பத்ரிக்கரை திட்டப்பகுதியில்ரூ.32.30 கோடியில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில்ரூ.29.85 கோடியில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்பு மயிலாப்பூர் தொகுதி ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் ரூ118.53 கோடியில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.41.08 கோடியில் 252 புதிய அடுக்குமாடி குடியிருப்பு, பருவா நகர் திட்டப்பகுதியில்ரூ.61.13 கோடியில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்பு என மொத்தம் 9 திட்டப்பகுதிகளில்ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் 3,238 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கற்று புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தாமோ அன்பரசன், தமிழ்நாட்டில் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும். தற்போது பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் 18 மாதத்தில் பணிகள் நிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தா மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications