சென்னை பல்லாவரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்று ஐடி ஊழியர் தற்கொலை
சென்னை: சென்னை பல்லாவரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்று ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி காயத்ரி (39). இவர்களுக்கு மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரி கிருஷ்ணன் (8) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் மனைவி, பிள்ளைகள் 2 பேரை கொலை செய்த பிரகாஷ் தற்கொலை செய்துக் கொண்டார்.

பிரகாஷின் தந்தை
இதுகுறித்து பிரகாஷின் தந்தை சங்கர் நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் கைரேகையை போலீஸார் பதிவு செய்தனர். வீட்டிற்குள் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றது. அந்த கடிதத்தில் தங்களின் இந்த முடிவு குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ 3.50 கடன் பத்திரம்
பிரகாஷின் வீட்டில் சுமார்ரூ 3.50 லட்சம் மதிப்பிலான கடன் பத்திரம் கிடைத்திருக்கிறது. எனவே பிரகாஷ் கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு விவரம் வந்தால் மட்டுமே தெரியும். முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ்தான் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.

கொலை
இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றினர். கடன் பிரச்சினையால் தவித்து வந்த பிரகாஷ் மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்தை காவல் ஆணையர் ரவி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

4 பேரின் சடலங்கள்
அவர்கள் 4 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பிரகாஷின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் யாரேனும் பிரகாஷை கொடுத்த கடனை கேட்டு மிரட்டியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications