சென்னையில் பட்ட பகலில் 100 பவுன் நகை கொள்ளை.. ராஜஸ்தான் தொழிலதிபரிடம் கைவரிசை.. வட மாநில கும்பலா?
சென்னை: சென்னையில் பட்டபகலில் நகைக் கடை அதிபரை தாக்கி, 100 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியகியுள்ளன. சினிமா பாணியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. நகை கடை அதிபரின் பெல்ட்டை கழற்றி அவரது கையை கட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்
சென்னை பாரிமுனை நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் யானைக்கவுணி வெங்கட்ராயன் தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

திடீரென தாக்குதல்
சென்னையில் உள்ள நகை கடைகளுக்கு நகைகளை செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெகதீஸ் நேற்று மாலையில் நகை பட்டறையில் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் 2 பேர் ஜெகதீஸின் நகை பட்டறைக்கு வருகை தந்துள்ளனர். நகைகள் வாங்க வந்தது போல அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய ஜெகதீசும் கடையில் இருந்த நகைகளை எடுத்து காட்டியிருக்கிறார். ஒவ்வொரு நகையாக காட்டிக்கொண்டு இருந்த போது திடீரென ஜெகதீசை கடுமையாக மர்ம நபர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.
100 சவரன் நகைகள் கொள்ளை
கடையில் இருந்த ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து ஜெகதீசின் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இருக்கிறார் ஜெகதீஷ். உடனே தங்கள் கையில் வைத்து இருந்த மயக்க ஸ்பிரேவை கொள்ளையர்கள் அடித்துள்ளனர். இதில் மயக்கம் அடைந்த ஜெகதீஸ், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
உடனே, நகை கடையில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் ஜெகதீஸ் உறவினர் ஒருவர் கடைக்கு வந்து இருக்கிறார். அப்போது ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து ஏதோ விபரீதம் நடந்துள்ளது என உணர்ந்துள்ளார். உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஜெகதீசை அனுமதித்துள்ளார்.
சிசிடிவி கேமிரா காட்சிகள்
இந்த கொள்ளை சம்பவம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற யானைக்கவுணி போலீசார், ஜெகதீசிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அவர் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்ட போலீசார், அங்கு இருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் நகை பட்டறைக்க்கு வந்து சென்ற இருவரின் உருவம் பதிந்தது.
வட மாநிலத்தவர்கள் போல தோற்றத்தில் தெரிந்ததால், அவர்கள் யார்? வட மாநில கொள்ளையர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் எங்கு சென்றார்கள்..
திட்டமிட்டு கொள்ளை நிகழ்த்தப்பட்டதா?
முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளை நிகழ்த்தப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். நேற்று மாலை 4.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் அரைமணி நேரம் கடைக்குள் இருந்த கொள்ளையர்கள் அதன்பிறகு வெளியேறும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. சென்னையில் பட்ட பகலில் அதுவும் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் நகை பட்டறை அதிபர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications