கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் விநியோகம் நிறுத்தம்.. உணவு உண்ணாமல் வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றம்
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டதால் அங்கு வரிசையில் காத்திருந்த 200-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றமடைந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசே உரிய விலையில் விற்பனையை தொடங்கியது.
இன்று காலை தொடங்கிய இந்த விற்பனையில் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து மக்கள் திரண்டனர். 100-க்கும் மேலானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரெம்டெசிவிர் மருந்துகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கவுன்ட்டர்
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து கிடைக்காதோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் இருந்தது. இந்த நிலையில் காலை 11 மணிக்கு மருந்து விற்பனை ஒரே ஒரு கவுன்ட்டரில் மட்டும் தொடங்கியது.

நோயாளியின் சிடி ஸ்கேன்
மருந்து வாங்க வருவோர் நோயாளியின் சிடி ஸ்கேன் ரிப்போர்ட், மருத்துவரின் பரிந்துரை சீட்டு, ஆதார் எண்ணுடன் வர வேண்டும். அது போல் மருந்து வாங்கும் நபரின் ஆதார் எண்ணும் கட்டாயம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ 9400 க்கு 6 டோஸ் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஏமாற்றம்
நேற்று டோக்கன் கொடுத்தவர்களுக்கு இன்று மருந்து விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மருந்து வாங்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

வாக்குவாதம்
அவர்களுக்கு டோக்கனையும் தரவில்லை. இதனால் கலைந்து போகாமல் இருந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து கவுன்ட்டர் மூடிவிட்டது. இதற்கு மேல் மருந்து விநியோகம் செய்ய மாட்டார்கள். எனவே கலைந்து செல்லுங்கள் என போலீஸார் கூறியதை அடுத்து அவர்களுடன் வரிசையில் நின்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திட்டமிடல்
இதுகுறித்து வரிசையில் நின்றவர்கள் கூறுகையில் நேற்று டோக்கன் வழங்கியவர்கள் மட்டும் வரிசையில் நில்லுங்கள் என கூறியிருந்தால் மற்றவர்கள் நின்றிருக்க மாட்டோம். காலை முதல் உணவு உண்ணாமல் வரிசையில் நின்றோம். தற்போது மருந்தையும் கொடுக்காமல் டோக்கனையும் கொடுக்காமல் அவர்கள் கவுன்ட்டரை அடைத்து விட்டு போய்விட்டனர். சரியாக திட்டமிடல் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications