ஏங்க அது தூக்க கலக்கம்தான்.. ஆளுநர் ரவி சொன்னது தவறு.. எந்த அச்சுறுத்தலும் இல்லை! அர்ச்சகர் விளக்கம்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி தரிசனம் செய்தார். அப்போது கோவில் பூசாரிகள் முகத்தில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்ததாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் எல்இடி ஸ்கீரின் மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் அந்த ஸ்கீரின்கள் அகற்றப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் எல்இடி ஸ்கீரின் வைக்க போலீசின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழ்நாட்டில் பொதுமக்கள் கோவில்களில் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்த தரிசனத்தை முடித்த பிறகு தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது - ஆளுநர் ரவி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த பதிவு என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் பூசாரிகள், கோவில் ஊழியர்களின் முகங்களில் பயம், அச்சம் உணர்வு இருந்ததாக கூறிய ஆளுநர் ஆர்என் ரவியின் கூற்றை கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர். அதன்படி சென்னை, மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் அடக்குமுறை எதுவும் நடக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநருக்கான பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி முறையான மரியாதை அளிக்கப்பட்டது என கோவிலின் மோகன் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். இரவு விழித்திருந்து பூஜைக்கு தேவையான வேலைகளை பார்த்ததால் முகத்தில் சோர்வு தெரிந்திருக்குமே தவிர, தமிழக அரசால் எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications