கோயம்பேட்டில் ஒரே வாசனை.. சென்னையில் ரெட்ரோஸ் விலையை பாருங்க.. ஊட்டியின் மூக்கை துளைத்த சிவப்பு ரோஜா
சென்னை: காதலர் தினத்தை முனனிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பூக்களின் விலை பன்மடங்காக எகிறிவிட்டது. அதிலும், பூக்களுக்கு பெயர்போன ஊட்டியில் ரோஜாப்பூ கிடைக்காமல், ஓசூரிலிருந்து தருவிக்கும் சூழ்நிலை இன்றைய தினம் ஏற்பட்டுவிட்டது.
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கமாகும். அந்தவகையில், மெரீனா பீச்சிலும் காதலர்கள் கூடுவது வழக்கமாகும்.

இதனிடையே, மெரினா பீச்சில் காதல் ஜோடிகளுக்கு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
மெரினாவில் பாதுகாப்பு
எனவே மெரினா கடற்கரையில் காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.. பொழுதுபோக்கு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் மீதான அத்து மீறல் சம்பவங்களை தடுப்பதற்காக அந்தந்த பகுதி காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல, காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்... இதனால் பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட நேற்றும், இன்றும் விற்பனை அதிகமாக இருந்ததாம்.
கோயம்பேடு பிஸியோ பிஸி
குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான காத லர்கள் குவிந்துவிட்டனர். இதனால் ரோஜாக்களின் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.
அதன்படி, 20 வண்ண பூக்களின் கொண்ட ஒரு பஞ்ச் ரோஜா ரூ.500ல் இருந்து 600க்கும், 20 பூக்கள் கொண்ட கட்டு ரோஜா ரூ.200ல் இருந்து ரூ.300க்கும், நோபிள்ஸ் ரக ரோஜா ரூ.400ல் இருந்து ரூ.500க்கும், ராக்ஸ்டார் ஆரஞ்ச் ரோஜா ரூ.350ல் இருந்து ரூ.450க்கும், ரெட் ரோஜா ரூ.450ல் இருந்து ரூ.550க்கும், ஜர்பூரா ரோஜா ரூ.150ல் இருந்து ரூ.250க்கும், தாஜ்மகால் ரோஜா ரூ.400ல் இருந்து ரூ.500க்கும் ஜரூராக விற்பனையானது. விலையை பற்றியெல்லாம் கவலைப்படாத காதலர்கள் தங்களுக்கு பிடித்த ரோஜாக்களை வாங்கி மகிழ்ந்தனர்..
அதிக லாபம் - அதிக மகிழ்ச்சி
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் சொல்லும்போது, "காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே, கோயம்பேடு மார்க்கெட்டில் காதலர் தின பூக்களை வாங்குவதற்கு காதலர்கள் குவிந்து வருகிறார்கள்..
பூக்களின் விலை உயர்ந்தாலும் அதனை சிறிது கூட கவலைப்படாமல் ரோஜாக்களை அள்ளி சென்றார்கள்.. இதனால் வியாபாரமும் சூடுபிடித்து அமோக லாபம் கிடைத்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த வருடத்தை விட, இந்த வருடம் காதலர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்படுவதால், பூ வியாபாரமும் அமோகமாக இருக்கிறது" என்கிறார்.
ஊட்டியில் ரோஜாப்பூ பஞ்சம்
அதேபோல, மலர்களுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் சிவப்பு வண்ண ரோஜாக்களின் உற்பத்தி குறைவாக இருந்தது. எனவே, ஊட்டிக்கு அதிகமான அளவுக்கு, ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா மலர்கள் தருவிக்கபபட்டன. இதனால் ஊட்டியில் எங்கு பார்த்தாலும், காதலர் தினத்தை முன்னிட்டு குவிந்துள்ளது சிவப்பு வண்ண ரோஜா மலர்கள் தென்பட்டன.












Click it and Unblock the Notifications