ஆன்லைன் ஆர்டரில் மிஸ்ஸான ஊத்தப்பம்! கேஸ் போட்டு ஜெயித்த சென்னை இளைஞர்! ரூ.15000 இழப்பீடு தர உத்தரவு
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நிலையில், அதில் தோசை மற்றும் ஊத்தப்பம் மட்டும் மிஸ்ஸாகி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உணவை முழுமையாக டெலிவரி செய்யத் தவறியதற்காக ஜொமோட்டோ நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் ரூ.15,000 அபராதம் விதித்துள்ளது.
இப்போதெல்லாம் உணவை பார்சல் வாங்க வேண்டும் என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்யவே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், சில நேரங்களில் இதுபோன்ற ஆன்லைன் ஆர்டர்களில் சிக்கல் வரும்.

சென்னை இளைஞர்: இதற்காக எந்த செயலியில் நாம் ஆர்டர் செய்தோமோ அதன் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டார். அவர்கள் இது தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே.. எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனக் கூறிவிடுவார்கள். நாமும் வேறு என்ன செய்வது என விட்டுவிடுவோம். ஆனால், இங்கே ஒருவர் அதற்காக கேஸ் போட்டு அதில் ஜெயித்தும் இருக்கிறார்.
என்ன நடந்தது: அதாவது கடந்த 2023 ஆக.21ம் தேதி பூந்தமல்லியில் வசிக்கும் ஆனந்த் சேகர் என்பவர் ஜொமேட்டோ செயலி மூலம் அருகே இருந்த அக்ஷய பவனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூ.498 பணத்தையும் செலுத்தியுள்ளார். கொஞ்ச நேரத்தில் ஆர்டரும் வீட்டில் டெலிவரி ஆகிவிட்டது. ஆனால், அதை செக் செய்த போது தான் அந்த ஆர்டரில் தோசையும் ஊத்தப்பமும் மிஸ்ஸானதை ஆனந்த் கவனித்தார்.
இதையடுத்து அவர் ஜொமேட்டோ உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளப் பலமுறை முயன்றார். இருப்பினும், அங்கே அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜொமேட்டோ நிறுவனம் முழுமையான நிவாரணத்தை வழங்காததற்கு இழப்பீடு கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆனந்த் வழக்கு தொடர்ந்தார்.
ஏற்க மறுப்பு: அப்போது ஜொமேட்டோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் இடைத்தரகர் மட்டுமே என்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யும் செயல்முறையை எளிதாக்குவது மட்டுமே தங்கள் வேலை என்று கூறினர். மேலும், உணவின் தரம் அல்லது ஆர்டரை முழுமையாக ஹோட்டல்கள் தருகிறார்களா என்பதை உறுதி செய்வது தங்கள் பொறுப்பல்ல என்றும் ஜொமேட்டோ வாதிட்டது.
இருப்பினும், இந்த வாதத்தை நுகர்வோர் ஆணையம் ஏற்கவில்லை.. ஜொமேட்டோ டெலிவரி கட்டணமாக 73 வசூலித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நுகர்வோர் ஆணையம், இதனால் ஆர்டர் முழுமையாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு ஜொமேட்டோ நிறுவனத்திற்கே இருப்பதாகத் தெரிவித்தது.
முக்கிய ரூல்ஸ்: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் லதா மகேஸ்வரி, ஜொமேட்டோவின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டினார். அதாவது அந்த விதிகளின்படி வாடிக்கையாளர்கள் சார்பாக ஹோட்டல்களில் ஆர்டர் வழங்கும் அதிகாரம் ஜொமேட்டோவுக்கு வழங்கப்படுகிறது. எனவே, அந்த ஆர்டர் முறையாக டெலிவரி செய்யப்படுகிறதா என்ற பொறுப்பும் ஜொமேட்டோவிடமே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பாலக் பன்னீர் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜொமேட்டோ.. ஒரு நியாயம் வேண்டாமா
மேலும், இதன் விசாரணையின் போது சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தையும் இந்த வழக்கில் சேர்த்து இருக்க வேண்டும் என்று ஜொமேட்டோ மற்றொரு வாதத்தை முன்வைத்தது. இருப்பினும், அதையும் ஏற்க மறுத்த நுகர்வோர் ஆணைய தலைவர் லதா, இதில் வழக்கு தொடர்ந்த சேகரின் ஒப்பந்தம் என்பது நேரடியாக ஜொமேட்டோ நிறுவனத்துடன் தான் இருப்பதாகவும் ஜொமேட்டோ நிறுவனமே சேவைக் கட்டணத்தை வசூலித்து இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இழப்பீடு: இந்த விவகாரத்தில் சேகருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கு இழப்பீடாக 10,000 ரூபாய் வழங்கவும், ஆர்டருக்காக செலவழிக்கப்பட்ட 498 ரூபாயைத் திருப்பித் தருமாறு ஜொமேட்டோ நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், வழக்குச் செலவுக்காக ரூ. 5,000 செலுத்துமாறு ஜொமேட்டோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications