பாலக் பன்னீர் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜொமேட்டோ.. ஒரு நியாயம் வேண்டாமா
சென்னை: பாலக் பன்னீர் ஆர்டர் செய்தவருக்கு ஜொமேட்டோ அளித்த அதிர்ச்சி குறித்த எக்ஸ் தளப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாப்பாடுங்கிறது வெறும் வார்த்தை இல்லை.. எமோஷன். அந்தப் பொண்ணு எவ்வளவு ஆசைப்பட்டு ஆர்டர் பண்ணியிருக்கும் இப்படி பண்ணீட்டீங்களே போன்ற கருத்துகளை பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
உணவு டெலிவரி செய்யும் ஆப்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆப்கள் வீடுதோறும் உணவுப் பிரியர்களை உருவாக்கி, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறது. என்னதான் உணவு ஆப்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உணவின் தரம், லேட் டெலிவரி, தவறான பொருள்களை டெலிவரி செய்வது போன்ற பிரச்னைகளும் தொடர்கதையாகவே உள்ளது.

ஒருபக்கம் பாசிட்டிவாக இருந்தாலும், மறுபுறம் டெலிவரி பார்ட்னர்ஸ் எதையாவது குதர்க்கமாகச் செய்து லைம் லைட்டில வரும் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுமாதிரி ஒரு சம்பவம்தான் தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து, எக்ஸ் பயனாளியான ஹிமான்சி என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈட்ஃபிட் என்ற உணவகத்தில் பாலக் பன்னீர், சோயா மட்டர் மற்றும் மில்லட் புலாவை ஜொமேட்டோ வழியாக ஆர்டர் செய்திருந்தேன். வெஜிட்டேரியன் உணவை மட்டுமே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்த எனக்கு பாலக் பன்னீருக்கு பதிலாக சிக்கன் பன்னீரை அனுப்பி வைத்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பதிவிட்டு தனக்கு அளிக்கப்பட்டிருந்த உணவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஜொமேட்டோ உணவை மாற்றி அனுப்பியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டு பதிவிட்டுள்ளனர். மேலும் அந்தப் பதிவில், இச்சம்பவம் உங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். உங்களது உணவு விருப்பங்களை மிகுந்த கவனத்துடன் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதனை மிகவும் மதிக்கிறோம். ஒருபோதும் அவமதிக்க மாட்டோம். இப்பிரச்னையை சரிசெய்ய சிறிது காலஅவகாசம் அளியுங்கள். விரைவில் இதற்கான தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல, சம்பந்தப்பட்ட உணவகத்தினரும் ஹிமான்சியிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். அவர்கள் வெளியிட்ட பதிவில், உங்களுக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்திற்கு மிகவும் வருந்துகிறோம். இப்பிரச்னையை உடனடியாக சரி செய்கிறோம். உங்களது ஆர்டரையும், தொடர்பு விவரங்களையும் மெசேஜில் அனுப்புங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் உணவு என்பது உணர்ச்சி ரீதியானது என்பது போன்ற பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புனேவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்த பன்னீர் பிரியாணியில் சிக்கன் பீஸ் இருந்தது தெரியவந்தது. வெஜிட்டேரியனான அவர் இதுபோன்ற சம்பவங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications