சென்னை இளைஞரின் தொண்டைக்குள் திடீரென்று பாய்ந்த மீன்.. கடைசியில் பெரும் சோகம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் இளைஞர் வாயில் வைத்தார். அந்த மீன் திடீரென்று துள்ளி அவரது வாய் வழியாக தொண்டைக்குள் சிக்கியது. இதனால் மூச்சுவிட முடியாமல் அந்த இளைஞர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்நாளை எண்ணி கொண்டு தான் இருக்கிறோம். என்றாவது ஒருநாள் இறப்பு நம்மை வந்து சேரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இறப்பு என்பது வயது முதிர்வால் இயற்கையானதாக வர வேண்டும் என்று தான் நம்மில் பலரும் நினைக்கிறோம்.

ஆனால் பலருக்கும் இறப்பு என்பது எதிர்பாராத விதமாக ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சிலரது இறப்பு என்பது இப்படிக்கூட சாவு வருமா? என்ற கேள்வியை நம் மனதில் எழுப்பி நம்மை கண்கலங்க வைத்துவிடும். இப்போது அப்படியொரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது. அந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
சென்னை மதுராந்தகம் அருகே கிழவளவு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் பலரும் மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன்படி மணிகண்டன் (வயது 29) என்பவர் ஏரிக்கு சென்றார். ஏரியில் அப்போது அதிகமான மீன்களை அவர் பார்த்தார். இதனால் மணிகண்டனுக்கு மீன்பிடிக்கும் ஆசை வந்தது. கையில் தூண்டில் உள்பட எந்த மீன்பிடி உபகரணங்களையும் அவர் எடுத்து செல்லவில்லை. இதனால் தண்ணீருக்குள் குதித்து கைகளால் மீனை பிடிக்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி மீன்கள் அதிகம் நீந்திய குறைந்த அளவு தண்ணீர் உள்ள இடத்தில் மணிகண்டன் குதித்து நீந்தியபடி மீன் பிடிக்க முயற்சித்தார். ஒரே நேரத்தில் 2 மீன்களை அவர் தனது கையில் பிடித்தார். மீன்கள் உயிரோடு இருந்ததால் அவரது கையில் இருந்து தப்பிக்க முயன்றது. இதனால் மணிகண்டன் ஒரு மீனை தனது வாயில் வைத்து கடித்து கொண்டார். இன்னொரு மீனை தனது ஒரு கையில் இறுக்கமாக பிடித்து கொண்டார்.
இப்படியாக அவர் தண்ணீரில் இருந்து வெளியே வர முயன்றார். அப்போதும் கூட அவரது வாய் மற்றும் கையில் இருந்த மீன் அவரிடம் இருந்து விடுபடும் எண்ணத்தில் துடித்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது வாயில் உயிருடன் இருந்த மீன் அவரது வாய்க்குள் நுழைந்தது. அடுத்த செகண்ட்டில் அந்த மீன் தொண்டைக்குள் போனது. அங்கிருந்து மீனால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை.
தொண்டையில் சிக்கிய மீனால் மணிகண்டன் சிரமப்பட்டார். அவரால் மூச்சுவிட முடியவில்லை. இதனால் பயந்துபோன மணிகண்டன் ஏரியில் இருந்து வேகமாக வெளியேறி அரையப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு குடும்பத்தினர், பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரது தொண்டையில் சிக்கிய மீனை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீனை எடுக்க முடியவில்லை.
இதற்கிடையே மூச்சுவிட முடியாமல் மணிகண்டன் துடிதுடித்து மயங்கினார். உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொண்டையில் மீன் சிக்கி இறந்த மணிகண்டன் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவர் மீன்பிடிப்பதில் எக்ஸ்பர்ட். இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து கீழவளவு ஏரியில் மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவத்தன்று அவர் மட்டும் தனியாக சென்று மீன்பிடித்தபோது தான் இந்த சம்பவம் நடந்தது என்பது இன்னொரு சோகமான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications