சென்னையில் சூப்பர் சம்பவம்.. நேரடியாக இறங்கிய மேயர் பிரியா.. அதிரடி காட்டிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்!
சென்னை: சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்றும் பணி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இன்று தொடங்கி உள்ளது.
சென்னை மாநகர சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் 1,038 வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் அகற்றாவிட்டால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அகற்றப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் ரிப்பள் பில்டிங்கில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் பழுதடைந்த நிலையிலும், பொதுசுகாதாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நீண்ட காலமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை மோட்டார் வாகனச் சட்டம் 380-ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128-ன்படி அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி இந்த விவகாரம் தொடர்பாக கள ஆய்வும் நடத்தியது. இந்த ஆய்வின் படி சென்னையில் 1,038 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்களின்வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
அப்படி அப்புறப்படுத்தப்படாத கைவிடப்பட்ட வாகனங்களை செப்டம்பர் 1-ம் தேதிமுதல் காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தி வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வைக்கபடும். அங்கும் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் விடப்படும் என மேயர் பிரியா கூறினார்.
மேலும் நீண்ட நாட்களாகக் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் மேயர் அறிவித்த காலக்கெடு முடிந்த நிலையில். சென்னையில் சாலையோரம் அகற்றப்படாமல் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றும் பணி செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் தொடங்கி உள்ளது. சென்னையில் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்றும் பணியினை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அவர்கள் முன்பாகவே வாகனங்கள் அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. இன்னும் பல பகுதிகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளது.எனவே சென்னையில நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடனே அகற்றுவது நல்லது.












Click it and Unblock the Notifications