எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டிய சென்னை மேயர் பிரியா.. பொறாமையில் புலம்பி தள்ளுகிறாராம்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. பொறாமையிலும் ஆற்றாமையிலும் புலம்பித் தவிக்கிறார் என விமர்சித்துள்ளார் பிரியா.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் உணவைச் சாப்பிட்டு பார்த்ததோடு, பயனாளிகளிடம் பேசினர். மேலும் 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திட உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த ஆய்வை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார் என விமர்சித்துள்ளார் சென்னை மேயர் பிரியா.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தி.மு.கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!
கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.
திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்." என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications