அடுத்த மெட்ரோ ரயில் ரூட் இதுதான்.. மீனம்பாக்கம் - பரந்தூர் விமான நிலையம்.. வேலையை தொடங்கிய CMRL
சென்னை: மீனம்பாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் தற்போது 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், உயர்மட்ட பாதை பணி, தூண்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலங்கரை விளக்கம், அடையாறு, சேத்துப்பட்டு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன.
இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை மொத்தம் 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைய உள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கு செல்லும் வகையில் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் என்ற அடிப்படையில் மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்படும் நிலையில், இந்த புதிய வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கிலோ மீட்டருக்கு ஒரு ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மீனம்பாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைகிறது. புதிய வழித்தடத்துக்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications