கத்திரி வெயில் போல் சுட்டெரிக்கிறது... நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் எகிறும்... எச்சரிக்கை
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க ஜூஸ், மோர் என குளிர்ச்சியான பொருட்களை நாடி வருகின்றனர். 10 மணிக்கு மேல் நேரம் செல்ல, செல்ல வெப்பம் கொளுத்துகிறது. மதிய வேளைகளில் சாலைகளில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக, இரவு நேரம் கடும் புழுக்கமாக உள்ளது.
இந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாளை முதல் அடுத்த 4 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 4செ.மீ மழையும், குந்தா பாலத்தில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் முதல், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, கத்திரி வெயில் போல், வெப்பத்தின் தாக்கம் சுட்டெரிக்கிறது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் சதம் போடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இப்போதே, சாலையோரம் தண்ணீர் பழம், பழச்சாறு, கூழ், மோர் என விற்பனை களைகட்டி உள்ளது.