9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யுமாம்... லிஸ்ட்டில் சென்னை மிஸ்ஸிங்!- சென்னை வானிலை மையம்
Recommended Video
சென்னை: வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே 4 -ஆம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை, வேலூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகணூரில் தலா 5 செ.மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர், லக்கூர், ஊட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், ஊத்தங்கரை, கரூர் மாவட்டம் பஞ்சபட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று வெப்பசலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மைய அதிகாரிகள் கூறுகையில் தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மழை பெய்யும் போது மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம். ஒரு சில இடங்களில் அனல்காற்று வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.