கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து வரும் நிலையில், மழை தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த கத்தரி வெயில் வரும் மே 28ஆம் தேதி வரை இருக்கும்.
கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இருப்பினும், அசானி புயல் காரணமாக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
அள்ளித்தந்த அசானி புயல்.. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை.. சென்னை வானிலை மையம் குட்நியூஸ்!
15 மாவட்டங்களில் மழை
இதனிடையே மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தொடரும்
அதேபோல நாளை மறுநாள் (மே 15) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 16, 17 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் கேரளா, இலட்ச தீவு, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மே 17ஆம் தேதி குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.