சதமடித்த வெயிலுக்கு இதமாக..16 மாவட்டங்களில் குளுமையை தரப்போகும் கனமழை - குடை அவசியம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலம் நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது. பல ஊர்களில் வெயில் சுட்டெரிக்கிறது. கடலூர், கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை, வேலூரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, தஞ்சாவூர், திருச்சியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுள்ளென வெயிலடித்தாலும் சில ஊர்களில் ஜில்லென மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 6 செ.மீ வானமாதேவி, காஞ்சிபுரம், புதுச்சேரியில் தலா 5 செ.மீ மழை பதிவானது. சுருளக்கோடு, ஆர்,கே பேட்டை, குடிதாங்கியிலும் தலா 5செ.மீ மழை பதிவானது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 மாவட்டங்களில் கனமழை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மிதமான மழை
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

சூறாவளிக்காற்று
இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 29 மற்றும் 30ஆம் தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சதீவு, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications