அடுத்த 24 மணி நேரத்திற்கு.. இந்த 8 மாவட்டங்களுக்கு கனமழை காத்திருக்கு.. வானிலை மையம் தகவல்
சென்னை: வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிப் பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்கள்
இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழக கடலோர பகுதி வரை நீட்டிப்பதன் காரணமாக இன்று (21.11.2021) திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை என்ன வானிலை
நாளை (22.11.2021) கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வானிலை ஆய்வு மையம் தகவல்
நவ. 23ஆம் தேதியை பெருத்தவரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். மேலும், நவ.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிகக் கனமழையும் தெற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்

சென்னையில் என்ன நிலை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications