வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமாம்.. என்ன புண்ணியம்?.. பள்ளிகளுக்கு லீவு இருக்காதே!
சென்னை: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் மற்றும் வடக்கு கேரள கரை வரை நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெய்யக் கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியது.
தாழ்வுப் பகுதி
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று அதே பகுதியில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் மழை
லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழைக்கான வாய்ப்பு
அதே போல் தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், அதன் பின்னரே தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறித்து கூற முடியும் என்று விளக்கமளித்துள்ளது.