தமிழகத்தில் குளிர் குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம்.. ஏசி ரிமோட்டை தேடி வைங்க!
தமிழகத்தில் குளிர் குறைந்து வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் குளிர் குறைந்து வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் முதல் வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. இதையடுத்து டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் உருவாகி அது புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இதன் பின்னர் சென்னையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதையடுத்து தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதையடுத்து மார்கழி மாதம் பனிக்காலம் தொடங்கியது.

மார்கழி மாதம்
மார்கழி மாதம் முடிந்த பிறகு தற்போது பிப்ரவரி மாதம் முடியும் நிலையிலும் மூடுபனி தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்த மூடுபனியால் காலை வேளைகளில் வாகனங்களில் பயணிப்பது சவாலாக இருந்தது. சில இடங்களில் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துகளும் ஏற்பட்டன.

பனியால் உடல்நலக் குறைபாடுகள்
பலருக்கு பனியால் உடல்நல குறைபாடுகளும் ஏற்பட்டன. இதனால் மருத்துவமனையில் சளி, இருமல் தொந்தரவுகளுக்காக அதிக அளவிலான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பனி குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாசி மாதம் தொடங்கிய நிலையில் பனி குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.

வெப்பநிலை எவ்வளவு
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் குளிர் குறைந்து படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுவையில் இரு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.4 டிகிரி பதிவாகியிருந்தது. சென்னை, கடலூர், கன்னியாகுமரி, கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும், அது போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இயல்பை விட வெப்பநிலை குறையும். குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கல்லி 15 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

ஏசி இயந்திரம்
23 ஆம் தேதி முதல் வரும் 26 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரியும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22- 23 டிகிரி செல்சியஸும் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே இனி வீடுகளில் ஏசி இயந்திரம் நான் ஸ்டாப்பாக ஓடும் நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications