வெயிலை தணிக்கும் இதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை காத்திருக்கு
தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் மழை தொடர்ந்தே வருகிறது.
சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்தத பிறகு வறண்ட வானிலையே நிலவியது. கடந்த பிப். மாதம் முதலே தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகமாகவே இருந்தது.
இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இப்போதே இந்தளவுக்கு வெயில் இருக்கும் நிலையில், கோடைக் காலத்தில் வெப்பம் மேலும் மோசமாகவே இருக்கும் என்று பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

வானிலை
இதனிடையே வெயிலுக்கு இதமாகப் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சில காலமாக வெப்பம் ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும் கூட, வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பெய்யும் இந்த மழையை மக்கள் என்ஜாய் செய்தே வருகின்றனர்.

அதிகாலை முதலே மழை
வரும் நாட்களிலும் மழை தொடரும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை முதலே தலைநகர் சென்னையில் பரவலான இடங்களில் மழை பெய்தே வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், பட்டாளம், புளியந்தோப்பு, வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல வடபழனி, விருகம்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

10 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்
வானிலை மையம் நேற்று வெளியிட்ட முன்னறிவிப்பில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி வரை மாநிலத்தில் பரவலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications