"தமிழ்நாட்டில் நல்ல மழை இருக்கு.." வானிலை மையம் தந்த ஹேப்பி நியூஸ்! சென்னையில் கிளைமேட் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கோடை வெயில் வைத்துச் செய்தது. ஜூன் இரண்டாம் வாரம் வரையிலும் கூட வெப்பம் மிகவும் உச்சத்தில் இருந்து. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. சில நாட்களில் வெப்பம் தணிந்து மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
வானிலை: இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தில் கிளர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டது. அதன் பின்னரும் கூட அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் கணிசமாக மழை பெய்தே வருகிறது. கோடை வெயிலால் சில மாதங்களாகவே பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்த நிலையில், இப்போது நிலவும் குளிர்ச்சியான வானிலை நிம்மதியைத் தந்துள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது குறித்து வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
அதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் (ஜூன் 26) நாளையும் (ஜூன் 27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிளைமேட் எப்படி: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் தேனி பெரியார் பகுதியில் 40 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல நீலகிரி கொடநாடு மற்றும் கிண்ணக்கொரை பகுதிகளிலும் புதுக்கோட்டை ஆயின்குடி பகுதியில் தலா 30 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது மட்டுமின்றி, கோவை, தென்காசி கன்னியாகுமரி, திருச்சி பகுதிகளிலும் கூட கணிசமாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வெப்பம் கணிசமாகக் குறைந்தே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இன்று முதல் வரும் ஜூன் 29ஆம் தேதி வரை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் குறிப்பிட்ட இடங்களில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் இதனால் சில குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications