ஒரே இடத்தில் நகராமல் இருக்கும் புரேவி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டும்- வானிலை மையம்
சென்னை: ராமநாதபுரத்திற்கு அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடந்த புரேவி புயலானது நேற்று மாலை மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவை இழந்தது.

மேக கூட்டம்
அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். காற்றின் திசையால் மத்திய பகுதிக்கு மேகக் கூட்டங்களால் மழை பெய்கிறது.

கனமழை
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ராமநாதபுரத்திற்கு அருகே மையம் கொண்டுள்ளது. அங்கும் இங்கும் நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.

திருவள்ளூர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுவை, காரைக்கால், கள்ளக்குறிச்சியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தென் தமிழகம்
ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மணல் திட்டுக்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காற்றின் வேகம் குறைந்துள்ள போதிலும் மழை விடாமல் தென் தமிழகத்தை கலக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications