மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது.. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.
சென்னையில் மெட்ரோ ரயில் 2-வது கட்டமாக மாதவரம் தொடங்கி, சமூகத்தில் உயர்த்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி என அறியப்படும் மயிலாப்பூர் வழியாக சிறுசேரி சிப்காட் வரை 46 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு புறநகர் நிலையம் தொடங்கி கலங்கரை விளக்கம் வரை 17 கி.மீ. வரை ஒரு பாதை அமைக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்ட் வழியாக சோழிங்கநல்லூர் வரை 45 கி.மீ. வரை மற்றொறு ரயில் பாதை அமைக்கிறது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன் கிழமை நடந்த சிறப்பு கவன ஈர்ப்பு கோரிக்கையில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு ரூ.80 ஆயிரம் கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை இறுதி செய்துள்ளது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பில் பொதுவாக வரவேற்பு இருந்த போதிலும், திட்ட வழித்தடத்தில் சில குறைபாடுகள் உள்ளன.
அதாவது, மெட்ரோ ரயில் கொள்கை, 2017-இன் வழிகாட்டுதலின்படி இது அமையவில்லை. மேலும், தற்போது அமைக்கப்படவுள்ள திட்டத்தில் சென்னைக்கான 2-ஆவது மெட்ரோ ரயில் வழித்தடமானது, டிடிகே சாலை, லஸ் சர்ச் சாலை, கச்சேரி சாலை ஆகியவை வழியாகச் செல்கிறது. இது வசதிபடைத்தவர்கள் வாழும் பகுதியாகும்.
இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சொந்த போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளனர். மேலும், மூன்று கிலோ மீட்டர் வழித்தடத்தில் அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் அல்லது பள்ளி, கல்லூரிகள் ஏதும் இல்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் உரிய பயனை அளிக்காது. இப்பகுதி சாலைகள் குறுகலானதாக இருப்பதால், இதர அரசு, தனியார் வாகனங்களின் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் இடையூறை ஏற்படுத்தும்.
மேலும், மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதனைச் சார்ந்து மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையம், மின்சார ரயில் நிலையம் ஆகியவைகள் அருகமையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது டி.டி.கே. சாலை வழியாக செல்லும் இந்த வழித்தடம் உயர் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் இடமாக இருப்பதாலும், மெட்ரோ ரயிலில் ஏறி, இறங்கி மாறி போவதற்கு மாற்று போக்குவரத்து வசதிகள் அருகில் இல்லாமல் இருப்பதாலும் இந்த வழித்தடம் பொதுமக்களுக்கு பயன்தாரது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்ட அமைப்பின் வழித்தடத்தை டி.டி.கே. சாலைக்குப் பதிலாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மெட்ரோ ரயில் பாதை சென்றால், அங்கே ஏற்கனவே குடியிருப்போர் வீடுகள் இடிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ரங்கராஜன் ராஜ்யசபாவில் முழங்கியுள்ளார்












Click it and Unblock the Notifications