சிட்டி மொத்தமா மாற போகுது! அப்படியே வெளிநாட்டில் வர மாதிரி இருக்கே! வாவ் போட வைக்கும் சென்னை மெட்ரோ
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது மெட்ரோ கட்டுமானம் நடந்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளிநாட்டில் வரும் ஒரு திட்டத்தை அமல்படுத்துகிறது.
சென்னையில் இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஓஎம்ஆர் சாலையில் துரைப்பாக்கம் சந்திப்பில் பணிகளை ஆரம்பித்துள்ளன.

இந்த ஓஎம்ஆர் சாலையில் மொத்தம் நான்கு மேம்பாலங்கள் வரவுள்ளன, என்றும் அவை அனைத்தும் சென்னை மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் உயர்த்தப்பட்ட பாதைகளாகக் கட்டப்படும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேம்பாலம் + மெட்ரோ: துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை விரிவாக்க பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக சிஎம்ஆர்எல் வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மேம்பாலங்கள் மற்றும் ரயில் பாதை இரண்டையும் ஒரே தூண் தான் சுமந்து செல்லும். மேம்பாலங்கள் ஸ்டேஷன்கள் ஒருங்கிணைந்து இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
தரமணி - எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, எம்ஜிஆர் சாலை - பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு மற்றும் சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் வரவுள்ளன. இந்த மேம்பாலங்கள் என்பது ஐடி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.. இந்த நான்கு மேம்பாலங்களுக்காகக் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ₹331 கோடி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
செலவை ஏற்பது யார்: ஏற்கனவே முதல் தவணையாக ₹50 கோடியை இந்த மேம்பாலத்திற்காக அரசு ரிலீஸ் செய்துவிட்டது. இந்த மேம்பாலங்களுக்கு மொத்தம் ₹459.32 கோடி செலவாகும் நிலையில், அதில் ₹331 கோடியைத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஏற்கும் நிலையில், மீதமுள்ள செலவைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்கும்.
இதற்கிடையில், சமீபத்தில்தான் இந்த நான்கு சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கான உயர்மட்டக் குழு ஒப்புதல் கிடைத்த நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் முறையே நான்கு பக்கங்களை இணைக்கும் வட்ட வடிவிலான மேம்பாலம் அமையும். எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு அருகே டி வடிவ மேம்பாலமும் பெருங்குடியில் எல் வடிவ மேம்பாலமும் அமைகிறது.
மெட்ரோ ரூட்: 116 கிமீ சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில், ஓஎம்ஆர் சாலையில் பகுதியில் இந்த மூன்றாவது காரிடார் பகுதி அமைகிறது.. இந்த மூன்றாவது காரிடர் மாதவரத்தில் தொடங்கி அயனாவரம், பெரம்பூர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருமயிலை, அடையாறு, இந்திரா நகர், உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்கிறது. திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் என ஓஎம்ஆர் சாலையில் பல பகுதிகள் வழியாகச் செல்லும் இந்த பாதை சிப்காட்டில் நிறைவடைகிறது.
இந்த மெட்ரோ பாதை மாதவரத்திலிருந்து தரமணி வரை நிலத்தடிப் பாதையாக இருக்கும் அதன் பிறகு சிப்காட் வரை இது உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் அமையும். மேம்பாலம் முதல் நிலையில் இருக்கும் அதே வேளையில், சென்னை மெட்ரோ ரயில் பாதை இரண்டாவது நிலையில் இருக்கும். தரையில் இருந்து, சுமார் ஆறு மீட்டர் உயரத்தில் மேம்பாலமும் தரையில் இருந்து சுமார் 18 மீட்டர் உயரத்தில் மெட்ரோ பாதையும் இருக்கும்.
வெளிநாட்டில் வருவது போல: இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளிநாட்டில் வருவதைப் போலவே புது பிளானை கையில் எடுத்துள்ளது. அதாவது அடுக்குமாடிக் குடியிருப்பில் நமது சென்னை மெட்ரோ நிலையம் அமையவுள்ளது. திருமங்கலத்தில் 12 மாடிக் கட்டிடத்தில் மெட்ரோ நிலையம் அமைய உள்ளது. அதில் 3ஆவது மாடியில் மெட்ரோ நிலையம் அமையவுள்ளது. அதேபோல கோயம்பேடு மற்றும் திருமயிலை பகுதிகளிலும் இதுபோன்ற பிளான்களை மெட்ரோ நிர்வாகம் அமைகிறது.
கோயம்பேட்டில் மெட்ரோ நிறுவனத்திற்குச் சொந்தமான காலியிடம் இருக்கும் நிலையில், அங்கே இதுபோன்ற குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டுள்ளன. தற்போதைய சென்னை மெட்ரோவில் பணிக்கும் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட டிக்கெட் வருவாயை வைத்து மட்டுமே சென்னை மெட்ரோவால் லாபத்தைச் சம்பாதிக்க முடியாது. இதன் காரணமாகவே டிக்கெட் வருவாயைத் தாண்டி இதுபோல மற்ற முறைகளிலும் வருவாயை அதிகரிக்கச் சென்னை மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications