சென்னை மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து 4 பேர் காயம்.. பிரேக் அடித்த போது விபத்து.. பயணிகள் ஷாக்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக் அடித்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் 4 பயணிகள் காயம் அடைந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம், விம்கோ நகர் - கோயம்பேடு வழியாக பரங்கிமலை என இரண்டு முக்கிய வழித்தடத்தில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது.

2 வது கட்டமாக தொடர்ந்து மாதவரம் - சிறுசேரி, மாதவரம் பால்பண்ணை -சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் அமைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல மெட்ரோ ரயில் அமைந்துள்ளதால் அதில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கண்ணாடி உடைந்து சிதறியது: மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்ட போது வெறிச்சோடி காணப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது பீக் நேரங்களில் புறநகர் ரயில்களுக்கு நிகராக கூட்டம் நிரம்பி வழிகிறது. சரியான நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விட முடியும் என்பதால் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட தற்போது மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணம் செய்ய முடிவதை பார்க்க முடிகிறது.
பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் எப்போதும் மெட்ரோ ரயில்கள் பரபரப்பாகவே காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து 4 பயணிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரேக் அடித்த போது மெட்ரோ ரயிலின் உள்பகுதியில் கண்ணாடி உடைந்து பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
போலீசார் விசாரணை: மெட்ரோ ரயிலின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்த போது கண்ணாடிகள் உடைந்து ரயிலுக்குள் சிதறியுள்ளது. இதில் ரயிலில் பயணம் செய்த 4 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து விழுந்து பயணிகள் காயம் அடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications