சென்னையில் நாளை முதல் மெட்ரோ கார்டு செல்லாது.. சிங்கார சென்னை கார்டு வாங்கினால் சூப்பர் லாபம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் வழக்கமாகப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த அந்தப் பழைய மெட்ரோ டிராவல் கார்டுகள் நாளை (மே 1) முதல் வேலை செய்யாது. மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே கார்டு' திட்டத்தின் கீழ், இனி 'சிங்கார சென்னை கார்டு மட்டுமே செல்லுபடியாகும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சிங்கார சென்னை கார்டு வாங்க எவ்வளவு செலவாகும்? யாருக்கு எவ்வளவு லாபம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளே.. நாளை (மே 1) முதல் பழைய மெட்ரோ கார்டுகள் செல்லாது. பயணிகள் அனைவரும் 'சிங்கார சென்னை கார்டு'க்கு மாற வேண்டியது கட்டாயம் ஆகும். இது தொடர்பாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை விவரமாக பார்ப்போம்.

நாடு முழுவதும் ஒரே அட்டை
சென்னை மெட்ரோ இதுபற்றி வெளியிட்டிருந்த அறிவிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் "சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)" அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் "சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)" முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ அறிவிப்பு
எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்" இவ்வாறு கூறியிருந்தது.
புதிய கார்டு வாங்க எவ்வளவு செலவாகும்?
இந்த சிங்கார சென்னை கார்டை நீங்கள் இரண்டு வழிகளில் பெறலாம். ஒன்று மெட்ரோ நிலையங்களில்.. அதாவது அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் இந்த கார்டை வாங்கலாம்.
விலை என்ன
கார்டு வாங்குவதற்கு ஆரம்ப கட்டணம் கிடையாது. ஆனால், கார்டை ஆக்டிவேட் செய்ய குறைந்தபட்சம் ₹100 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தத் தொகை உங்கள் கார்டு பேலன்ஸில் சேர்ந்துவிடும், அதை நீங்கள் பயணத்திற்குப் பயன்படுத்தலாம். (குறிப்பு: உங்கள் பழைய கார்டில் உள்ள பணத்தை இதற்கும் மாற்றிக்கொள்ளலாம்).
யார் யாருக்கு இந்த கார்டால் அதிக லாபம்?
தினசரி பயணிகள்: வழக்கமான பயணிகளுக்குக் கிடைக்கும் 20% கட்டணத் தள்ளுபடி இதிலும் தொடரும். அலுவலகம் செல்பவர்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்த இந்த கார்டைப் பயன்படுத்தலாம் என்பதால், சில்லறை தேடும் அலைச்சல் மிச்சமாகும்.
அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் இந்த ஒரு கார்டை வைத்துக்கொண்டு டெல்லி, பெங்களூரு என இந்தியாவின் எந்த நகரத்திலும் மெட்ரோவில் பயணிக்கலாம். அந்தந்த ஊரில் புது கார்டு இனி வாங்கத் தேவையில்லை. பெண்கள் மற்றும் முதியவர்களுக்கும் பயனுள்ளது ஆகும். பஸ்களிலும் இந்த கார்டு வசதி வந்துவிட்டதால், இனி கண்டக்டரிடம் 'சில்லறை இல்லை' என்ற பேச்சிற்கே இடமில்லை. கார்டைத் தேய்த்துவிட்டு டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.
பழைய கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு:
நாளை முதல் பழைய கார்டு செல்லாது..எனவே பழைய கார்டை ஒப்படைத்துவிட்டு புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம். கார்டில் உள்ள பேலன்ஸ் தொகையை புதிய கார்டுக்கு மாற்றிக் கொள்ள கவுண்ட்டர்களில் உதவி பெறலாம். இனி பழைய கார்டுகளில் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதால், கையில் இருக்கும் பேலன்ஸை இன்றே பயன்படுத்திக் கொள்வது அல்லது மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம் ஆகும்.












Click it and Unblock the Notifications