டிக்கெட் எல்லாம் வேண்டாம்! சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்.. அதுவும் தினமும்! எப்படி தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே சென்னை மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.
சென்னையில் இப்போது நீலம் மற்றும் பச்சை என்று இரு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட், சென்டிரல் முதல் பரங்கி மலை வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.
இது தவிர மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடங்களிலும் மெட்ரோ அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இவையும் முடிந்தால் சென்னை விரிவான மெட்ரோ அமைப்பைக் கொண்ட நகராக மாறும்.

மெட்ரோ: இப்போது இருக்கும் மெட்ரோ நெட்வோர்கிலேயே சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் சென்னை மெட்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மெட்ரோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்குச் சென்னை மெட்ரோவில் பயணித்தோரின் எண்ணிக்கை உச்சம் தொட்டது.
இது தவிர வேறு பல புரோமோஷனல் நடவடிக்கைகளும் சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செயலி அல்லது கார்டு மூலம் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி இருக்கிறது. இதற்கிடையே புதிய பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் முயற்சியாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்ட பயணிகளுக்கு புரோமோஷனல் டிக்கெட்களை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது வார நாட்களில் சராசரியாகத் தினமும் சுமார் 2.5 லட்சம் பேர் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர்.
இலவச டிக்கெட்: இது எதிர்பார்க்கப்பட்ட 7 லட்சம் பயணிகளின் எண்ணிக்கையை விட குறைவு என்பதால் இந்த புரோமோஷனல் நடவடிக்கையைச் சென்னை மெட்ரோ ஆரம்பிக்க உள்ளது. இதற்காகத் தனியாக மார்கெட்டிங் குழுவும் உள்ளது. இந்தக் குழு தான் குறிப்பிட்ட பயணிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு இந்த புரோமோஷனல் டிக்கெட்களை வழங்குவார்கள். இதை வைத்து அவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஸ்டேஷன் சுற்றி குறிப்பிட்ட தூரத்திற்குள் வசிக்கும் கல்லூரி அல்லது பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது வழங்கப்படும். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் டிக்கெட்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான மார்கெட்டிங் குழு அந்த பயணிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது.
என்ன பிளான்: ஆய்வுக்குப் பின்னர் உரியப் பயணிகள் கண்டறியப்பட்டு புரோமோஷனல் டிக்கெட்கள் வழங்கப்படும்.. தொடக்கத்தில் இவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம். அதன் பின்னர், சலுகை கட்டணத்தில் இவர்களால் பயணிக்க முடியும். இவர்களின் சலுகை கட்டணம் படிப்படியாகக் குறைக்கப்படும். மற்ற வழிகளில் பயணிப்போரோ மெட்ரோ நெட்வோர்க்கில் கொண்டு வர வேண்டும் என்பதே இதன் இலக்கு. நிச்சயம் இது வெற்றிகரமாக இருக்கும்" என்றார்.
இந்த டிக்கெட்டுகள் அந்த குறிப்பிட்ட பயணிகளின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்படும். எனவே, இந்த டிக்கெட்கள் மூலம் மற்றவர்கள் பயணிக்க முடியாது.. மேலும், குறிப்பிட்ட இந்த டிக்கெட் வைத்துக் குறிப்பிட்ட ஸ்டேஷனில் மட்டுமே ஏறவும் இறங்கவும் முடியும். அது அவர்களின் வேலை செய்யும் இடங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் இருக்கும்.
இதற்கான ரூல்ஸ் மற்றும் பிஸ்னஸ் ப்ரோபோசல்களை உருவாக்கும் பணிகளில் இப்போது சென்னை மெட்ரோ இறங்கியுள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவடைந்து தேவையான அனுமதி பெறப்பட்டு இந்த புரோமோஷனல் டிக்கெட்களை வழங்கும் பணி தொடங்கும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications