சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்தானால் என்ன? ஆபத்பாந்தவனை போல் வந்த எம்டிசி! சொன்ன குட் நியூஸ்
சென்னை: கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகளால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களின் சிரமங்களை போக்க கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவை நேற்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அதே போல் நேற்று முதல் 22 ஆம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின்னர் புறப்படும் புறநகர் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
மூர் மார்க்கெட்டில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட்டது. திருவள்ளூரில் இருந்து நேற்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
பட்டாபிராமில் இருந்து நேற்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் ஆவடியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
ஆவடியில் இருந்து இன்று அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் ரத்தால் பொது போக்குவரத்து இல்லாமல் மக்கள் சிரமங்களை சந்திக்கக் கூடும் என்பதால் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஷ் தெரிவித்துள்ளார். நேற்று இரவு 11.45 மணி முதல் 22 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications