சொத்து வரி செலுத்த கடைசி தேதி.. சென்னை மாநகராட்சி அறிவித்த "மழைக்கால ஆஃபர்".. என்னென்ன தெரியுமா?
சென்னை: சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த சொத்துவரி உயர்வு அறிவிப்புக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், வரி செலுத்துவதற்கான தேதி செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுமார் 85 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னையில் 13 லட்சம் பேர் சொத்துவரியை செலுத்த தகுதியானவர்களாக உள்ள நிலையில், சொத்துவரியை அனைவரும் செலுத்திவிட்டால் வரி வருவாய் இந்த ஆண்டு ரூ.1,000 கோடியை தாண்டும்.
இந்நிலையில் குறிப்பிட்ட தேதிக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 சதவிகிதம் தனி வட்டி விதிக்கப்படும். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த தனி வட்டி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

30ம் தேதிக்குள்
தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்த அளவில் 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பெருநகரத்தில், மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாநகராட்சிக்கு நிதி ஆதாரம் அவசியமானது என்றும் எனவே சொத்து வரி உயர்த்தப்படுகிறது என்றும் சொல்லப்பட்டது. சென்னையில் மட்டும் 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தி முடித்துவிட வேண்டும்.

தளர்வு
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி இந்த 13 லட்சம் பேரில் சுமார் 54% பேர் வரியை செலுத்தியுள்ளனர். செலுத்தாமல் இருப்போருக்கு 2 சதவிகிதம் தனி வட்டி விதிக்கப்படும். இவ்வாறு இருக்கையில், சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மாணம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி சொத்து வரி சீராய்வின்படி அரையாண்டு முதல் உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாதவர்களுக்கு 2% தனி வட்டி விதிப்பிலிருந்து தளர்வு அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம்
ஏற்கெனவே சொத்துவரி சீராய்வுக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சீராய்வு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் வரி செலுத்தியவர்கள் இந்த வரி உயர்விலிருந்து தப்பித்துக்கொண்டனர். ஆனால் சீராய்வு அமலுக்கு வந்த பின்னர் வரி செலுத்துபவர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவ்வாறு இருக்கையில் இந்த சிரமத்தை போக்க 2% தனி வட்டி விதிப்பிலிருந்து தளர்வு அளிக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தள்ளுபடியும் கூட
மேலும், அக்டோபர் 15ம் தேதிக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5% தள்ளுபடியும் கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. கடந்த 2021ல் அரையாண்டில் சொத்துவரி வசூல் ரூ.450 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் இந்த வரி வருவாய் ரூ.1,000 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநகராட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications