விதிமீறல் கட்டிடங்களுக்கு வரப்போகுது ஆப்பு.. சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ புதிய திட்டம்
சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை தடுக்க உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் ஆகியவை தமிழக அரசிடம் ஒப்புதலை கோரி உள்ளன.
அங்கீகாரம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டிடங்களை கண்காணிக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் நகரமைப்பு மற்றும் ஊரக திட்டமிடல் இயக்குநரகம் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது

அங்கீகரிக்கப்படாத உயர் அடுக்குமாடி கட்டடங்களை கண்காணிப்பது சி.எம்.டி.ஏ.,வின் கீழ் வருகிறது. இந்நிலையில் இந்த புதிய உயர்மட்ட குழுவிற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், சென்னை கமிஷனருக்கு அதிகாரம் கிடைக்கும் என்று சிஎம்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை தடுக்க பல்வேறு உத்தரவுகள் இருந்தும், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கடந்த ஜூன், 14ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
கட்டுமானங்களில், அனுமதியில்லாத கட்டுமானங்கள், திட்ட அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் , அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மேல் மாடிகள் கொண்ட கட்டடங்கள், குடியிருப்புக்கு அனுமதி பெற்று, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது , விதிவிலக்கான கட்டுமானங்கள் என நான்கு முக்கிய பிரிவுகளில் கட்டுமானங்கள் உள்ளதாகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால் டிசம்பர் 17, 2018 அன்று வெளியான அரசாணையின் படி, சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை தடுக்க சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுதான் இதுவரை கண்காணித்து வந்தது.இந்நிலையில மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாநகராட்சி ற்றும் சிஎம்ஏடி அதிகாரிகள் குழு உருவாக்கப்படும் பட்சத்தில் முரண்பாடுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதனிடையே முன்னாள் சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், அங்கீகாரமற்ற கட்டிடங்களை தடுக்க, அதற்கென உள்ள அதிகாரிகளை மட்டும் பயபன்படுத்தாமல், மாநகராட்சியின் மொத்த அதிகாரிகளையும் பயன்படுத்தி, மண்டல வாரியாக அல்லது பிரிவு வாரியாக விதிமீறல் கட்டுமானங்களைக் கண்காணிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி 2, 1999 க்கு முன் கட்டப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்கும் விஷயத்தில் எழுந்த கோரிக்கை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் 2007 க்கு முன் கட்டிடங்களை கட்டிய விதிமீறல்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் புதிய திட்டமும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்ற சிஎம்டிஏவின் கோரிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், மாநகராட்சி ஆணையரே இனி சென்னை மற்றும் புறநகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications