சென்னை- நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து.. எந்தெந்த ரயில் சேவைகள் இயங்காது தெரியுமா?
சென்னை: சென்னை- நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 6 ரயில்கள் இன்றைய தினம் ரத்தாகிறது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் எனும் விரைவு ரயில்களுக்கான என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதி வேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் 2018-ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் 34 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பாதுகாப்பு அம்சங்கள், ஜிபிஎஸ் டிராக்கிங் வசதிகள், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக பயண நேரம் என்பது குறைந்துள்ளது. இதனால் கட்டணம் அதிகமாக இருந்தாலும் வந்தே பாரத் ரயில்களை மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னை- கோவை, சென்னை - பெங்களூர், சென்னை- மைசூர் என்ற வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இது நின்று செல்கிறது.
வாரந்தேறும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னை - நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த விடுமுறை நாளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த நிலையில் இன்று சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் விழுப்புரம்- திருச்சி இடையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 6 ரயில்கள் இன்றைய தினம் ரத்து செய்யப்படுகின்றன. விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. சில ரயில்களை வெவ்வேறு மார்க்கங்களில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே நிர்வாகம் சில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி எர்ணாகுளம்- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் வரும் 25ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது அதிகாலை 1.45 மணிக்கு புறப்பட்டு அதே நாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. அது போல் திருவனந்தபுரம்- எர்ணாகுளம் இடையே மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடைகிறது. மேலும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் 25 ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.32 மணிக்கு செல்லும். பிப்ரவரி 24 ஆம் தேதி கொல்லம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் பிற்பகல் 2.25 மணிக்கு இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications