அழுக்கான போர்வை, தலையணைகள்.. சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. சென்னையில் "தரமான" சம்பவம்
சென்னை: ஏற்கனவே பயன்படுத்திய போர்வை, தலையணைகள் வழங்கப்பட்டதால் கடுப்பான பயணிகள், சங்கிலியை பிடித்து இழுத்து எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
பல புகார்களை கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ரயிலை சங்கிலி பிடித்து இழுத்து நிறுத்த வேண்டிய நிலைக்கு ரயில் பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பயணிகளுக்கு புதிய போர்வையும், தலையணைகளையும் ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இங்கு காண்போம்.

அழுக்கான தலையணைகள்..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குஜராத்தில் உள்ள கேவடியா மாவட்டத்திற்கு செல்லும் சென்னை - கேவடியா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 10.40 மணிக்கு புறப்பட்டது. ரயில்களில் பொதுவாக ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை, தலையணைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ரயிலில் ஏற்கனவே குஜராத்தில் இருந்து சென்னை வந்த பயணிகள் பயன்படுத்திய தலையணைகளும், போர்வைகளும் அப்புறப்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

புகார் கூறியும் நடவடிக்கை இல்லை..
இதை கவனித்த பயணிகள், ஏதேனும் பிரச்சினை காரணமாக இந்த தலையணைகளை எடுத்துச் செல்ல தாமதாகி இருக்கும் என அமைதிக் காத்துள்ளனர். ஆனால், நீண்டநேரமாகியும் அவற்றை ரயில்வே ஊழியர்கள் யாரும் எடுத்துச் செல்லவில்லை. ரயில் புறப்பட்டதே இரவு 10.40 மணி என்பதால் பயணிகளுக்கு தூக்கமும் வந்துள்ளது. இதுகுறித்து ரயில் டிடிஆர்-இடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அதிரடியில் இறங்கிய பயணிகள்..
மேலும், இந்த விவகாரம் குறித்து தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்திலும் பயணிகள் புகார் எழுப்பினர். அதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறிது நேரத்தில் அவை அப்புறப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், ஓடிக்கொண்டிருந்த ரயிலை சங்கிலியை பிடித்து இழுத்து அதிரடியாக நிறுத்தினர்.இதில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சற்று முன் ரயில் நிறுத்தப்பட்டது.

உடனே வழங்கப்பட்ட புதிய தலையணைகள்..
சங்கிலி இழுக்கப்பட்டதால் யாரேனும் ரயிலில் இருந்து விழுந்து விட்டார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையாக என அடித்து பிடித்து ஓடி வந்த ரயில்வே போலீஸாரிடம், ஏற்கனவே பயன்படுத்திய தலையணைகளையும், போர்வைகளையும் உடனே அப்புறப்படுத்தி தங்களுக்கு புதிய போர்வை, தலையணைகளை வழங்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்ததும் உடனடியாக பயணிகளுக்கு புதிய தலையணைகளும், போர்வைகளும் வழங்கப்பட்டன.

ரயில்வே விளக்கம்..
இந்நிலையில், இதுகுறித்து அகமதாபாத் ரயில்வே பிரிவு மேலாளர் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "பயணிகளின் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்தக்காரர் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிககை எடுக்கப்படும்" என்றார். தென்னக ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், அகமதாபாத் பிரிவு ரயில்வே நிர்வாகத்துக்கும், ஒப்பந்தக்காரருக்கும் இடையே உள்ள பிரச்சினையால் இந்த சம்பவம் நடந்துள்ளது" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications