தலைகீழாக மாறும் "ஓ.எம்.ஆர்" சாலை.. இனி ஜாலியாக பறக்கலாம்! சென்னை டிராபிக்கிற்கு இது ரொம்ப முக்கியம்
சென்னை: ஐடி நிறுவனங்கள் குவிந்து இருக்கும் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையில் இருக்கும் பெரிய பிரச்சினைக்கு இப்போது தமிழ்நாட அரசு அச்சகசமான தீர்வை கொண்டு வந்துள்ளது.
சென்னையில் இப்போது டிராபிக் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பீக் ஹவரிஸில் வெளியே சென்றால் குறைந்தது 20, 30 நிமிடங்கள் சாலைகளிலேயே இருக்க வேண்டிய ஒரு சூழலே சென்னையில் இருக்கிறது.

இதனால் சென்னை வாசிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் சென்னையில் டிராபிக்கை குறைக்கத் தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஓஎம்ஆர் சாலை: சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் குவிந்திருக்கும் பகுதியாக இருக்கிறது ஓஎம்ஆர். காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான மக்கள் இங்கு செல்வதால் ஓஎம்ஆர் சாலையில் அதிக டிராபிக் ஏற்படுகிறது. இதற்கிடையே இங்கே டிராபிக்கை குறைக்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கே டிராபிக்கை குறைக்க நான்கு மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காகத் தமிழக அரசு ₹331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மேம்பாலங்கள் கட்டுவது டிராபிக்கை எந்தளவுக்குக் குறைக்கும் என்பதை உணர்ந்த அரசு, அறிவிப்புடன் நிற்காமல், இதற்கான முதல் தவணையாக ₹50 கோடியை ஒதுக்கியுள்ளனர்.
எங்கு வருகிறது: இங்கு டிராபிக் அதிகமாக இருக்கும் தரமணி-எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, எம்ஜிஆர் சாலை-பெருங்குடி சந்திப்பு, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு மற்றும் சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. மேம்பாலங்களை அமைக்கும் இந்த பணிகளை இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடக்கும் நிலையில் அத்துடன் மேம்பாலத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இங்கே பொதுமக்கள் அதிகம் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யோசனை. மெட்ரோ ரயில் கட்டுமானத்துடன் ஒரே நேரத்தில் மேம்பாலப் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்களுக்குச் சிரமம் குறையும். இந்த மேம்பாலங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தனை கோடி: இந்த மேம்பாலங்களைக் கட்டி முடிக்க ரூ. 459.32 கோடி ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ₹331 கோடியைத் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ஒதுக்கும். இந்த நிதியைத் தான் இப்போது தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள தொகையைச் சென்னை மெட்ரோ நிறுவனம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் என இந்தப் பகுதி தலைகீழாகவே மாறியுள்ளது. இதனால் சாலையில் வாகனப் போக்குவரத்து பெருமளவில் அதிகரித்துள்ளதால், மேம்பாலங்கள் அவசியமாகின. இங்கே பீக் ஹவர்ஸில் சென்றாலே இந்த முக்கிய சந்திப்புகளில் குறைந்தது 30 நிமிடங்கள் நிற்க வேண்டியுள்ளது. மெட்ரோவுடன் இந்த பாலங்களும் வந்துவிட்டால் இனி கவலையே இல்லாமல் ஆனந்தமாகச் செல்லலாம்.
முக்கியம்: இங்கே ஒரு மணி நேரத்திற்கு 10,000 பயணிகள் கார் யூனிட்கள் பயணிக்கிறது. இங்குச் சாலைகளையும் விரிவாக்கம் செய்ய முடியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில், மேம்பாலங்கள் அவசியமாகிறது. மெட்ரோ கட்டுமானம் இங்கே நடக்கும் நிலையில், அத்துடன் இணைந்து இதைக் கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி மேம்பாலங்கள் முதல் நிலையிலும், மெட்ரோ ரயில் பாதைகள் இரண்டாவது நிலையிலும் இருக்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications