சென்னையில் இனி டிராவல் பண்ணுறது ரொம்ப ஈஸி... ஒரே ஒரு டிக்கெட் போதும்... நாளை முதல் அறிமுகம்
சென்னை: சென்னையில் ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வசதி நாளை முதல் அறிமுகமாகிறது. நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் "சென்னை ஒன்று" என்ற செல்போன் செயலி நாளை தொடங்கப்படுகிறது. இந்த செயலியில் ஒரு டிக்கெட் எடுத்தால் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துகொள்ள முடியும்.
சென்னையில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னையில் ஒரே ஒரு டிக்கெட் மூலமாக பஸ், ரயில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வசதியை தமிழக அரசு செய்துள்ளது.

சென்னை ஒன்று செயலி
இதற்காக "சென்னை ஒன்று" என்ற ஆப்பை தொடங்கியுள்ளது. இந்த ஆப்பின் மூலம் பஸ்சுக்கு தனியாக, ரயிலுக்கு தனியாக, மெட்ரோ ரயிலுக்கு தனியாக என தனித்தனியாக டிக்கெட் எடுக்க தேவையில்லை. ஏற்கனவே பஸ்களில் டிக்கெட் எடுக்க UPI வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில்கள், மெட்ரோ ரயில்களில் செல்போனிலேயே டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில் தான் நாளை முதல் "சென்னை ஒன்று" என்ற செல்போன் செயலி தொடங்கப்படுகிறது.
நாளை தொடங்கி வைக்கிறார்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது சென்னை பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்.
UPI மூலம் கட்டணங்கள்
மேலும் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியை நாளை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுபோன்று நாட்டிலேயே முதல் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்று' என்ற செல்போன் செயலியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த செயலி பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே 'QR' பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், UPI அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில்
இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'சென்னை ஒன்று' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பக பார்க்கப்படுகிறது. இனி பொதுமக்கள் பயணச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்" என்று கூறப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த செயலி பயன்பாட்டுக்கு வருகிறது என்பதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications