பறக்கும் ரயில் சேவை 7 மாதங்களுக்கு ரத்து.. கடும் சிக்கலில் சென்னைவாசிகள்.. சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை: கடற்கரை - எழும்பூர் இடையே 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்காக, கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், பணிகளுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோல தென் மாவட்டங்கள் முழுமைக்கும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர் வரை உள்ள பாதைகள் மூன்று வழி பாதையாக மட்டுமே இருக்கிறது. எனவே தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் ரயில்கள் எழும்பூர் வரை தடையின்றி வந்துவிடுகிறது. ஆனால், அங்கிருந்து கடற்கரை வருவதற்கு தாமதமாகிறது. இந்த வழித்தடத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதேபோல எழும்பூரிலிருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், சரக்கு ரயில்களும் இந்த மூன்று வழிப்பாதை காரணமாக தாமதமாக இயக்கப்படுகிறது.

எனவே இந்த பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.96.70 கோடி நிதியை ஒதுக்கியிருந்தது. தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் காரணமாக பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் தினசரி 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இதில், சென்னை கோட்டை ரயில் நிலையம் மூலமாக ஒரு நாளைக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், பொதுமக்களும் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே ரூ.279 கோடி மதிப்பில் 4 கிலோ மீட்டருக்கு புதிய பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்திற்காக, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில்கள், ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் அடுத்த 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, கடற்கரை -பூங்கா நகர் வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி செல்பவர்கள் இனிமேல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்துதான் செல்ல முடியும். அதேபோல சென்னை கடற்கரை வரை உள்ள ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ்சில்தான் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியும். 4வது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறும் 7 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

சென்னை கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கல்லூரிகள், பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்லமுடியவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகம் மற்றும் கடற்கரை ஆகிய பகுதிகளில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு மினி பஸ் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மினி பஸ் அதிகளவில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து நேற்று முதல் தினமும் கூடுதலாக 140 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிகள் முழுமை அடைந்த பிறகு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications