சென்னையில் சிலிண்டர் புக்கிங் தோல்வி.. காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடும் மக்கள்.. என்ன நடக்கிறது?
சென்னை: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் இந்திய கப்பல்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. அவசர கால கையிருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசு உடனடியாக வணிக சிலிண்டர்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவிட்டது. வீடுகளுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகங்களில் நேற்று சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா,இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டன. இதுபற்றி கடந்த ஒரு மாதமாக எச்சரிக்கை வந்த வண்ணம் இருந்தன. அப்போதே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால் கேஸ், பெட்ரோல், டீசலுக்கு பெரும் சிக்கல் வரும் என்று கூறப்பட்டது. இதனிடையே எதிர்பார்த்தது போலவே ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கடந்த வாரம் முதல் தாக்குதலை ஆரம்பித்தன. இதனால் ,ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலும் தடைபட்டது.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரம் கையிருப்புகளை வைத்து அரசு சமாளித்த நிலையில், முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இதையடுத்து, சென்னையில் பல இடங்களில் உணவகங்கள், தேநீர் கடைகள் மூடப்பட்டன. சில உணவகங்களில், சிக்கன் ரைஸ், சாப்பாடு விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு சில உணவுகள் மட்டும் வழங்கப்படுகின்றன. இது ஒருபுறம் எனில் வீடுகளுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவை 25 நாட்களாக அரசு உயர்த்தி உள்ளது. அப்படி உயர்த்தியும் தட்டுப்பாடு குறையவில்லை.. பலருக்கு சிலிண்டர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் கேட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் ஏஜென்சி அலுவலகங்களை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டார்கள். காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து ஒரு வாரம் கடந்தும் வரவில்லை என்றும், சிலிண்டர் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, ஏஜென்சி வட்டாரங்கள் கூறுகையில், "காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பீதியால், ஒரு நேரத்தில் பலர் பதிவு செய்ய முயல்கின்றனர். இது தோல்வி அடைந்து விடுகிறது. பலரும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயல்வதால், புக்கிங் ஆவது இல்லை.. இதனால் அவர்கள் அலுவலத்தை முற்றுகையிடுகின்றனர். ஒரு சிலிண்டர் வழங்கி, அடுத்த சிலிண்டர் 25 நாட்களுக்கு பிறகு வழங்கப்படும். எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன என்று தெரிவித்தன.
சென்னையில் பல்வேறு கேஸ் நிரப்பும் மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் சிஎன்ஜி ஆட்டோக்கள் ஓட்ட முடியாத நிலையில் உள்ளன. கேஸ் நிரப்பும் சில இடங்களில் உள்ள மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications