நாளை மதியம் ஆரம்பிக்கும் மழை.. சென்னைவாசிகள் இப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்!
சென்னை: சென்னை, சென்னையின் புறநகர் பகுதிகளில் நாளை மதியம் முதல் கனமழை பெய்யும் என்பதால் சென்னைவாசிகள் தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
சென்னையில் கடந்த இரு தினங்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இன்று வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது.

இரவு நேரம்
இந்த நிலையில் நாளை மதியம் அல்லது இரவு நேரத்தில் தொடங்கும் கனமழை அடுத்த நாள் நவம்பர் 11 ஆம் தேதி மதியம் வரை இடைவிடாமல் பெய்யும். அன்றைய தினம் இரவு அல்லது மாலை முதல் மழை படிப்படியாக குறையும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நாளை மதியம் முதல் நாளை மறுநாள் மாலை வரை கடலூர் முதல் சென்னை வரை அதி தீவிர கண்காணிப்பு அவசியம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

நல்ல மழை பெய்யும்
அது போல் இன்று இரவும் சென்னையில் நல்ல மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பெய்த மழைக்கே இன்னும் தண்ணீர் வடியாத நிலை சென்னையின் பெரும்பாலான இடங்களில் உள்ளது. இதில் இன்று இரவு வேறு கனமழை பெய்தால் என்ன செய்வது? மேலும் நாளையும் இடைவிடாமல் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தின் அளவு
இதனால் வெள்ளத்தின் அளவு மேலும் உயரும் அபாயம் உள்ளது. நாளை மதியம் கனமழை பெய்யும் என வானிலை மையமும் தெரிவித்துள்ளது. எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எளிதாக தண்ணீர் தேங்கும் இடங்களில் மக்கள் பயணிக்காமல் இருப்பது நல்லது. புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திநகர், மேற்கு மாம்பலம், அம்பத்தூரின் சில பகுதிகள், நுங்கம்பாக்கம், பட்டரவாக்கம், பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்கலாம்.
Recommended Video

பாதுகாப்பு
இதே போல் புறநகர் பகுதிகளான முடிச்சூர் , வரதராஜபுரம், வேளச்சேரி, கொளத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தோ, இரு சக்கர, சைக்கிள் வாகனத்திலோ செல்வதை மக்கள் தவிர்த்துக் கொள்வது பாதுகாப்பானது என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அது போல் தொடர் மழையினால் கட்டடங்கள் இடிந்து விழும் அபாயமும் உள்ளது, எனவே பழைய கட்டடங்களுக்கு அருகே செல்லாமல் இருப்பதும் நல்லது. அவசர தேவை என்றால் மாற்று வழியை நாடலாம். இல்லாவிட்டால் தண்ணீரின் ஆழத்தை அறிய கம்புகளை ஊன்றி பார்த்து செல்லலாம்.












Click it and Unblock the Notifications