சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் அடுத்தடுத்து கோடிகளில் நிலம் மோசடி.. முதியவர்களே உஷார்
சென்னை: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த முதியவர் மற்றும் சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் ஆகியோர் வாங்கிய நிலங்களை, போலி ஆவணம் தயாரித்து கோடிகளில் மோசடி செய்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இடம் வாங்கி போட்டுள்ள முதியவர்களை குறிவைத்து போலி ஆணவங்கள் மூலம் நிலத்தை அபகரிக்கும் கும்பல்கள் அண்மைக் காலமாக அதிக அளவில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

எனவே சென்னையின் புறநகர் பகுதிகளில் வீடு, நிலம், வீட்டுமனை வாங்கி போட்டிருந்தால், அடிக்கடி சென்று பாருங்கள். மோசடி ஏற்படாத அளவிற்கு விழிப்புடன் இருங்கள்.. இல்லாவிட்டால் நீதிமன்றம், காவல் நிலையம் என அலைய வேண்டிய நிலை ஏற்படலாம்.
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 69 வயதாகும் குணசேகரன் என்பவருக்கு சொந்தமாக பூந்தமல்லி அடுத்த கொளுத்துவாஞ்சேரி பகுதியில் 4,160 சதுர அடி நிலம் இருக்கிறது. இந்நிலையில் இவரது நிலத்தை யாரோ ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்துள்ளார்கள். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன், சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரின் கவனத்திற்கு சென்றது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், சென்னை போரூர் காமதேனு நகரை சேர்ந்த 63 வயதாகும் ராஜூ என்பவர் போலி ஆவணம் மூலம் ஆள் மாறாட்டம் செய்து பத்மநாபன் என்பவருக்கு நிலத்தை மாற்றி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கைச் சேர்ந்த 47 வயதாகும் பெர்சிலின் ராஜா (47), ஆவடி அடுத்த மோரை மதுரா, வீராபுரம் பகுதியில் 1,800 சதுர அடி கொண்ட வீட்டு மனை வாங்கி போட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆல்வான் என்பவரிடம் இடத்தை வைத்து ரூ.7 லட்சம் கடனாக கேட்டிருக்கிறார். இதையடுத்து ஆல்வான் ரூ.1 லட்சம் மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த இடத்தை ஆல்வான், பெர்சிலின் ராஜாவுக்கே தெரியாமல் ஜெயபிரகாஷ் என்பவருக்கு மோசடியாக விற்றுவிட்டாராம். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.18 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெர்சிலின் ராஜா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்வான் (34) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications