பெருங்குடியில் வருது மாற்றம்.. நாலாபக்கமும் சுழலும் சென்னை மாநகராட்சி ஆபீசர்ஸ்.. மேயர் பிரியா அதிரடி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தினமும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டும் வருகின்றன.
குறிப்பாக, பெருங்குடி குப்பை கிடங்கு 225 ஏக்கர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கிறது. இவற்றில் பல வருடங்களாகவே, சேர்ந்துள்ள 30 லட்சம் கன மீட்டர் குப்பையை முழுமையாக மறுசுழற்சி செய்து, 100 சதவீத நிலத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

பணிகள்: பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பயோ மைனிங் முறைக்காக, சுமார் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தையும் எட்டிவிட்டன.. இந்த குப்பை கொட்டும் வளாகத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.
அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தில், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். தற்போது, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், இதற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லி உள்ளதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வருகிற 8-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
அறிவிப்பு: இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications