தந்தை போலீஸ்.. மகன் திருடன்.. காவலர் குடியிருப்பிலேயே கைவரிசை - போதையால் மாறிய பாதை
கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் அவர், போதைப்பழக்கத்தால் திருடனாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் காவலர் குடியிருப்பில் உள்ள வீடுகளில் கைவரிசை காட்டிய சப் இன்ஸ்பெக்டர் மகனை போலீஸார் கைது செய்தனர்.
தவறான சேர்க்கை, போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட காரணங்களே அவனை திருடனாக மாற்றிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சப் இன்ஸ்பெக்டர் மகன் ஒருவரே திருட்டுச் செயலில் ஈடுபட்ட சம்பவம் போலீஸாரையும், குடியிருப்புவாசிகளையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

பாதை மாறும் இளைஞர்கள்
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. ஒருமுறை போதையில் விழுந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து மீள்வது கடினம் எனத் தெரியாமல் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். சில சமயங்களில், போதைப்பொருள் வாங்க பணம் இல்லாமல் போனால் கொலை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களிலும் அவர்கள் ஈடுபட துணிகின்றனர். அப்படியொரு சம்பவம்தான் சென்னையில் நடந்திருக்கிறது.

போலீஸ் குடியிருப்பில் திருட்டு
சென்னை புதுப்பேட்டையில் காவலர் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் 5 போலீஸாரின் வீடுகளில் ஒரே நாளில் நகைகள், பணம் திருடுப் போயின. மொத்தம் 16 சவரன் தங்க நகைகள், ரூ.34 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் திருடுப் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட போலீஸார் இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் மகன்
இதன்பேரில், போலீஸார் புதுப்பேட்டை காவலர் குடியிருப்புக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, வெளிநபர்கள் யாரும் காவலர் குடியிருப்புகள் வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, குடியிருப்புகளில் வசிக்கும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, எழும்பூர் ஆயுதப்படையில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனான நந்தகோபால் என்பவர் சம்பவம் நடந்த தினத்தில் இருந்து காணாமல் போனது தெரியவந்தது.

கைது நடவடிக்கை
இதன் தொடர்ச்சியாக, அவரது செல்போன் எண்ணை வைத்து ட்ரேஸ் செய்ததில் சிந்தாதரிப்பேட்டையில் சிக்னல் காட்டியது. பின்னர், அங்கு சென்ற போலீஸார் தனது நண்பன் வீட்டில் தலைமறைவாக இருந்த நந்தகோபாலை பிடித்து விசாரித்தனர். அப்போது, திருட்டில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் அவர், போதைப்பழக்கத்தால் திருடனாக மாறிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், அவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்ட அருண் என்பவரையும் போஸீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த திருட்டு நகைகள், பணம் மற்றும் செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications