ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா உட்பட 3 ரவுடிகள் சென்னைக்குள் கால் வைக்க முடியாது! அதிரடி உத்தரவு
சென்னை: ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகள் ராக்கெட் ராஜா, லெனின், நெடுங்குன்றம் சூர்யா ஆகியோர் சென்னைக்கு வரத் தடை விதித்துக் காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போலீசார் சட்ட ஒழுங்கை உறுதி செய்யப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமின்றி, குற்றங்கள் நடப்பதையே தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

ரவுடிகள் வரத் தடை
இதற்கிடையே 3 ரவுடிகள் சென்னைக்குள் வரக் காவல் ஆணையரகம் தடை விதித்துள்ளது. ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான ரவுடிகள் ராக்கெட் ராஜா, லெனின், நெடுங்குன்றம் சூர்யா ஆகியோர் சென்னைக்கு வரத் தடை விதித்து காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராவது, காவல் விசாரணை தவிர வேறு எந்தவொரு காரணங்களுக்கும் சென்னை வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் உத்தரவு
சென்னை மாநகரம் மட்டுமின்றி சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு இவர்கள் மூன்று பேரும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செக்ஷன் 51ஏ ஆஃப் சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ரவுடிகளை கண்காணித்து வருகிறார்கள். ஏ பிளஸ் ரவுடிகள் சென்னையில் இருந்தாலும் சரி, பிற பகுதிகளில் இருந்தாலும் சரி நுண்ணறிவு பிரிவு போலீசார் தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். நுண்ணறிவு போலீசார் அளித்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தத் தடை மீறி இவர்கள், சென்னையில் அசம்பாவிதச் சம்பவத்தில் ஈடுபட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதச் சம்பவத்தில் ஈடுபட்டால் மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட (நீதிமன்ற வழக்கு, காவல் விசாரணை) தவிர்த்துப் பிற காரணங்களுக்காக வர சென்னைக்குள் வருவது தெரிந்தாலே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர்களால் ஆபத்துகளும் வன்முறை குற்றத்தில் இவர்கள் ஈடுபடலாம் என்பதால் இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ரவுடிகள்
இதில் நெடுங்குன்றம் சூர்யா என்பவர் மீது 8 கொலை வழக்கு உட்பட 200 குற்ற வழக்குகள் உள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்குப் பட்டியல் அணி மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ராக்கெட் ராஜா, லெனின் ஆகியோர் மீதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications