தவெக தலைவர் விஜய் மீது பாய்ந்தது வழக்கு.. சென்னையில் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தியதால் சிக்கல்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தியதாக மாம்பலம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம், தமிழகத்தில் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சில இடங்களில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டு ஆளும் கட்சி அனுமதி கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாக விஜய் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.

அதேசமயம், பல இடங்களில் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்கிறார். மேலும் திட்டமிட்டு தொடங்கிய பிரச்சாரம் பாதியில் ரத்து செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் திருப்பூரில் தாமதம் காரணமாக போலீசார் எச்சரித்ததால் அனுமதி பெற்ற ரோடு ஷோவை ரத்து செய்தார் விஜய்.
நேற்று 8 மணி வரை தவெக விஜய் பிரச்சாரத்திற்கு சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 மணிக்கே பிரச்சாரத்தை முடித்து, பாதியில் பரப்புரையை ரத்து செய்து விட்டார். விஜய் நேற்று சென்னையில் தியாகராய நகர், ஆயிரம் விளக்கு எழும்பூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தது.
தியாகராய நகர் வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளர் ஜேசிடி பிரபாகர், எழும்பூர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பேரியில் பிரச்சாரம் செய்வதாக இருந்த விஜய், கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் வழி மாறிச் சென்றார். பின்னர் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
8 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி கடந்ததும் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கிளம்பினார். விஜய்யின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கை அவரை பார்க்க வருபவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, தவெக தலைவர் விஜய், தியாகராய நகர் வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பு அப்புனு உள்ளிட்டோர் மீது மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தியாகராய நகரில் பிரச்சாரம் நடந்த அனுமதி பெற்ற நிலையில் திடீரென ரோடு ஷோ நடத்தியதால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விஜய் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications