போலீஸுக்கு சவாலே இதுதான்.. ரொம்ப கஷ்டமா இருக்கு! உதவி ஆணையர் மரணத்தால் மனம் வெதும்பிய கமிஷனர் அருண்!
சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று உயிரிழந்த உதவி காவல் ஆணையர் சிவக்குமார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய பின் காவலர்கள் பற்றி கவலையுடன் பேசியுள்ளார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தி வருகின்றன. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.8 கிமீ தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தய சர்க்யூட் அமைக்கப்பட்டு நேற்றும் இன்றும் போட்டிகள் நடந்து வருகின்றன. ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டியை கண்டு ரசிக்க பார்வையாளர்கள் இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக கடந்த சில நாட்களாக, தீவுத்திடல் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் பார்முலா கார் பந்தயம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் போட்டி தொடங்குவது தாமதமானது. FIA அனுமதி பெற தாமதம் ஆனதால் மாலை 7 மணியளவில், கார் ரேஸ் தொடங்கியது.
கார் பந்தயம் நடைபெறும் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் நேற்று மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து, அங்கிருந்த போலீசார், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிவக்குமார் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை உயிரிழந்தார்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் உடல் இன்று அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று, சிவக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் குடும்பத்தினரிடம், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார் காவல் ஆணையர் அருண். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமிஷனர் அருண்.
அப்போது பேசிய ஆணையர் அருண், “காவல்துறையில் களப் பணியாற்றுபவர்கள், உடல்நிலையை பராமரிப்பது சவாலான விஷயமாகவே இருக்கிறது. உடல்நிலையையும் பணியையும் பேலன்ஸ் செய்வது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. நாங்கள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். அதையும் மீறி சில நேரங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்து விடுகிறது.
சிவக்குமாரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். ரொம்ப சின்சியரான அதிகாரி. என்னுடனும் அவர் வேலை பார்த்துள்ளார். பணியில் இருக்கும்போது அவர் இறந்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. போலீசாரின் உடல்நிலையை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications