எஸ்.ஐ-யை அறைக்குள் பூட்டிவிட்டு தப்பி ஓடிய வட மாநில கொள்ளையர்கள்.. விரட்டி பிடித்த போலீஸார்!
வடமாநில கொள்ளையர்களை விரட்டி பிடித்த 3 போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சென்னை: தமிழ்நாட்டு போலீஸை வடமாநில இளைஞர்கள் என்னான்னு நெனச்சிட்டாங்கன்னே தெரியல... கண்ணில் மண்ணை தூவி ஓட பார்த்தாங்க.. ஆனா விரட்டி சென்று கொஞ்ச நேரத்துல பிடிச்சு சபாஷ் வாங்கிட்டாங்க நம்ம போலீஸ்காரங்க!!
பீகார் முசபர்பூரை சேர்ந்தவர்கள் அவதேஷ் ரே மற்றும் முந்த்ரா குமார். அவங்க மாநிலத்துல வேலை கிடைக்காம சென்னை வந்திருக்காங்க. இங்க சொந்தக்காரங்க வீட்டில தங்கி வேலை பாத்திருக்காங்க. ரெண்டு பேருடைய வேலையும் என்ன தெரியுமா? ஆட்டைய போடறதுதான்.
பொருட்கள் அபேஸ்
காலைல ஆனா சென்ட்ரல் ரயில்வே ஷ்டேஷனில் போய் நின்று கொள்ள வேண்டியது. அங்க வரும் பயணிகளை நோட்டம் போட வேண்டியது. பசை உள்ள ஆட்கள் வந்தால், அவங்கள திசை திருப்புற மாதிரி எதையாவது ஒன்னை பண்ணி, இருக்கிறத அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிறது.
காஸ்ட்லி திருடர்கள்
திருடுவது எல்லாமே காஸ்ட்லி பொருட்கள்தான். கொள்ளையடித்ததை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஃப்ளைட்ல தான் போவாங்கன்னா பாத்துக்குங்களேன். அந்த அளவுக்கு காஸ்ட்லி திருடர்கள்! இப்படித்தான் கடந்த 3-ம் தேதி ரெண்டு பேரும் திருட்டு ஒன்றில் ஈடுபடும்போது, ரயில்வே போலீசார் இருவரையும் பிடித்து பெரியமேடு போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தார்கள்.
விசாரணை
இப்படி சிக்கி கொள்வோம் என 2 பேருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் இல்லாம கொள்ளையடித்ததை ஊருக்கு கொண்டு போக 7-ம் தேதி அதாவது நாளைக்கு ஃப்ளைட்ல டிக்கெட் புக் பண்ணி வெச்சி இருந்திருக்காங்க. இந்த டிக்கெட், உட்பட மற்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியமேடு ஸ்டேஷனில் ரெண்டு பேரும் விசாரணைக்கு பின்னர் ஒரு இடத்தில் உட்கார வைக்கப்பட்டனர்.
கதவை சாத்திவிட்டார்கள்
நேற்று முன்தினம் அவர்களை ஸ்டேஷனில் போலீஸார் விசாரணை நடத்திய பின்னர் ஒரு ரூமில் அமர வைக்கப்பட்டனர். அப்போது ஸ்டேஷன் எஸ்ஐ ராஜேந்திரன் ஃபைல் எடுக்க ரூமுக்குள் போனார். ரூமுக்குள் தனியாக எஸ்.ஐ. சிக்கி கொண்டதை பார்த்த 2 பேரும் அவருக்கு தெரியாமல் நைஸாக வெளியே போய் ரூம் கதவை வெளிப்புறமாக சாத்திவிட்டு எஸ்கேப் ஆனார்கள்.
பெண் போலீஸ் வேதநாயகி
அறைக்குள் இருந்து இருவரும் வெளியே ஓடியதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணராஜ் என்ற 2 போலீசாரும் அவர்களை சத்தம் போட்டு கொண்டே துரத்தி ஓடினார்கள். ஸ்டேஷனில் ட்யூட்டிக்கு வந்து கொண்டிருந்த பெண் போலீஸ் வேதநாயகி இவர்களின் சத்தத்தை கேட்டு சுதாரித்து கொண்டார்.
மடக்கி பிடித்தனர்
உடனே ஒரு ஆட்டோவை பிடித்து பூந்தமல்லி ஹைவேயில் சென்று ஓடிக் கொண்டிருந்த 2 போலீசாருடன் இணைந்தார். இப்போது 3 பேரும் சேர்ந்து 2 திருடர்களை விரட்ட ஆரம்பித்தார்கள். கடைசியாக மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெறும் இடம் அருகே 2 பேரையும் 3 போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கமிஷனர் பாராட்டு
இப்படி எஸ்.ஐ.யை ரூமுக்குள் வைத்து பூட்ட தப்பி சென்ற திருடர்களை விரட்டி பிடித்த 3 போலீசாரையும் சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்து வெகுமதியும் வழங்கினார். காஸ்ட்லி திருடர்கள் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்