சென்னையை காலி செய்த புயல்! இன்று எந்த சாலைகளில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை! மூடப்பட்ட சப்வே எவை
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுள்ள நிலையில், இப்போது நகரில் போக்குவரத்து எங்கே எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையை அப்படியே புரட்டிப் போட்டது. நகரில் எல்லா இடங்களிலும் கனமழை கொட்டிய நிலையில், நீரும் அதிகளவில் தேங்கியது. இதனால் சென்னை மொத்தமாக முடங்கியது.

கடந்த ஞாயிறு இரவு தொடங்கிய கனமழை நேற்று காலை வரை பல்வேறு இடங்களிலும் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் நீர் முழுமையாகத் தேங்கி மோசமான நிலை தான் இருக்கிறது.
புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல்: நகர் முழுக்க மழை நீர் தேங்கி இருக்கும் நிலையில், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நேற்று காலை முக்கிய சாலைகளில் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இன்னும் உட்புற சாலைகளில் நீர் தேங்கி இருப்பதாகவே புகார்கள் வருகிறது. தற்போதைய சூழலில் முக்கிய சாலைகள் மட்டும் நீர் வடிந்து, மெல்லப் போக்குவரத்தும் ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் இப்போது போக்குவரத்து எப்படி இருக்கிறது என்பது குறித்து சென்னை போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னையில் 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பஜார் ரோடு, பவுண்ட் சப்வே, ஆலந்தூர் தில்லை கங்கா நகர் சப்வே உள்ளிட்ட 9 சுரங்கப்பாதைகளில் மட்டுமே நீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் டிராபிக் எப்படி: இது குறித்து சென்னை டிராபிக் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளின் தற்போதைய போக்குவரத்து நிலை.. விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்குத் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்தப் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வட பெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர் தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DORT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன.
நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள்: கணேசபுரம் அரங்கப்பாதை, செம்மியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் அரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப் பாதை (ஒருவழிப் பாதை), C.B.சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்க உதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, சூளைமேடு,லயோலா சுரங்கப்பாதை, கதிர்வேடு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல கனமழையால் சென்னை பெருநகரில் 75 இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications