குடிப்பழக்கம் இல்லாத நபர் குடித்ததாக காட்டிய ப்ரீத் அனலைசர்.. தயாரிப்பு நிறுவனத்தில் போலீஸ் விசாரணை
சென்னை: ப்ரீத் அனலைசர் கருவியில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டையில் வேலை விஷயமாக காரில் சென்றுவிட்டு சாலிகிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு போலீஸார் தீபக்கின் வாகனத்தை வழி மறித்தனர். அவர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை அறிய ப்ரீத் அனலைசர் கருவியை கொண்டு சோதனை செய்தனர்.
அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும் அவரது உடலில் 45 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகவும் தங்களின் ப்ரீத் அனலைசர் மிஷின்கள் காட்டுவதாக கூறிய போலீஸார் அபராதத்தை பதிவு செய்ய போவதாக தெரிவித்தனர். மேலும் அதற்கான ரசீதில் கையெழுத்திடுமாறும் தீபக்கை வற்புறுத்தியதாக தெரிகிறது.
போலீஸார் கூறுவதை கேட்டு தீபக் அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீஸாரிடம் அவர் சார் எனக்கு மது குடிக்கும் பழக்கமே கிடையாது. நான் மது குடிக்கவில்லை என்றார். ஆனால் அதை போலீஸார் ஏற்க மறுத்து அபராதத்தை செலுத்துமாறும் ரசீதில் கையெழுத்திடுமாறும் குடித்ததை ஒப்புக் கொள்ளுமாறும் கூறினர். மேலும் நாங்கள் நாங்கள் தினமும் 1000 வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.

குடிக்காத தீபக்
அப்போது தீபக் நான் குடித்ததே இல்லை சார். நீங்கள் வேண்டுமானால் என்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை மேற்கொள்ளுங்கள். அப்போது நான் குடிக்கவில்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியும் என்றார். ஆனால் போலீஸாரோ நாங்கள் ஏன் உங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்? நீங்கள்தான் உங்கள் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றனர்.

தீபக் வாக்குவாதம்
ஆனால் தீபக்கோ நான் ஏன் சார் அதை செய்யணும், நீங்கள் தானே அபராதம் செலுத்துமாறு கேட்கிறீர்கள். எனவே நீங்கள்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தார். பிறகு போலீஸார் தங்களிடம் இருந்த வேறு ஒரு ப்ரீத் அனலைசர் கருவியை கொண்டு தீபக்கிற்கு சோதனை செய்தனர். அதில் தீபக் உடலில் 0 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாக காட்டியது. மீண்டும் சோதனை செய்த போதும் அதே 0வை காட்டியது. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீபக்கை போலீஸார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ப்ரீத் அனலைசர் சோதனை
இந்த நிலையில் போலீஸார் தவறான ப்ரீத் அனலைசரை வைத்துக் கொண்டு சோதனை நடத்துவதாக தீபக் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சராட்கர் கூறுகையில், இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை, சென்னை காவல் துறையில் 320 ப்ரீத் அனலைசர்கள் உள்ளன. இது போன்ற பிரச்சினை இருந்ததே இல்லை, எனவே இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாக கபில் குமார் தெரிவித்துள்ளார்.

விசாரணை
இந்த நிலையில் ப்ரீத் அனலைசரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதனை தயாரித்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ப்ரீத் அனலைசரில் குறைபாடுகள் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் ஆட்சேபம் தெரிவிக்கும் போது சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளலாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications