ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை..
சென்னை: சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தலைநகர் சென்னையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் ஒன்று வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் இறந்தார்.
காரில் இருந்த சிலிண்டர் வெடித்த நிலையில் அவர் இறந்ததாக கூறப்பட்டது. அதோடு சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் உள்ளிட்ட சில பொருட்கள் கிடைத்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கோவை கார் வெடிப்பு: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு.. கைதான ஆம்பூர் இளைஞர் வீட்டில் போலீஸ் பரபர சோதனை
பயங்கரவாத சந்தேகம்
மேலும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என பாஜக குற்றம்சாட்டியது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சார்ந்த அடையாளங்கள் வீட்டில் இருந்தன. இதனால் போலீசாருக்கும் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
18 பேருக்கு தொடர்பு
இதையடுத்து தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கோவையில் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோட்டைமேடு, பொன்விழா நகர், ரத்தினபுரி, உக்கடம் உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை மண்ணடி, புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சென்னையில் மீண்டும் சோதனை
இந்நிலையில் இன்று சென்னையில் பல இடங்களில் போலீசார் காலை முதலே சோதனையை துவக்கினர். அதன்படி சென்னை மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு, முத்தியால் பேட்டை பகுதியில் சிலரது வீடுகளில் நுழைந்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக முந்தைய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தான் இன்றும் சோதனை நடத்தப்படுகிறது.
காலையிலேயே பரபரப்பு
இதனால் தான் இன்று காலை முதலே சோதனை நடக்கும் மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.