ஜெய்பீம் படம்.. ராஜாக்கண்ணுவின் மருமகனுக்கு லுங்கியுடன் வர கமிஷனர் அலுவலகம் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தினுள் லுங்கியுடன் புகார் அளிக்க சென்ற ஜெய்பீம் ராஜாக்கண்ணுவின் மருமகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வேட்டி அணிந்து கொண்டு புகார் அளிக்க வந்தார்.
ஜெய்பீம் என்ற திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோஸ் ஆகியோர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படம் ராஜாக்கணு என்ற பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம் என்பதால் இது பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரம் அதில் உண்மைக்குப்புறம்பான சில விஷயங்கள் இருப்பதாக கூறி பாமக, காடுவெட்டி குருவின் மகன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகிய இருவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய கதாபாத்திரம்
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜாக்கண்ணுவின் சகோதரியின் மகன் குளஞ்சியப்பன். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜெய்பீம் படம் தொடர்பாக நேற்றைய தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

லுங்கி
அப்போது அவர் லுங்கியுடன் இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று வேட்டி வாங்கி கொடுத்தனர். இதையடுத்து அவர் வேட்டியை கட்டிக் கொண்டு புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.

பொது மக்கள் கோரிக்கை
சாமானிய மக்களும் வந்து செல்லும் காவல் துறை அலுவலகத்திற்கு ஆடை கட்டுப்பாடுகளை போலீஸார் விதிப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் அவரவர் அணிந்துள்ள உடையில் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications