ரவுடி சி.டி. மணி கைது- ராமஜெயம் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணை? சிக்கப் போகிறாரா முக்கிய புள்ளி?
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி சி.டி. மணியிடம் தமிழக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக போலீசார் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.டி. மணியிடம் நடத்தப்படும் விசாரணையில் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய புள்ளி ஒருவர் சிக்குவதற்கும் சாத்தியம் உள்ளது என்பது போலீஸ் வட்டாரங்களின் தகவல்கள்.
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 9 ஆண்டுகளுக்கு முன்னர் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி, சிபிஐ ஆகியவை விசாரித்தன. ஆனாலும் ராமஜெயம் கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக எந்த மர்ம முடிச்சும் அவிழ்க்கப்படாமல் இருக்கிறது.
ஏனெனில் முக்கிய புள்ளி ஒருவருக்காகவே ராமஜெயம் கொலை அரங்கேற்றப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதனாலேயே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் துளிகூட முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

ரவுடி சி.டி. மணி கைது
தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தூசு தட்டப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடி சி.டி. மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் பாண்டி கோஷ்டி
சென்னை ரவுடிகளில் மிக முக்கியமானவர் தேனாம்பேட்டை மணிகண்டன் என்ற சி.டி. மணி. தமிழகத்தை கதிகலக்கிய திண்டுக்கல் பாண்டிதான் மணியின் குரு. திண்டுக்கல் பாண்டி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தவர் சி.டி. மணி.

திமுக புள்ளிகளுடன் மோதல்
சி.டி.மணியின் தொடக்க காலம் முதலே சென்னையில் திமுக புள்ளிகளுடன் மோதுவதுதான் வழக்கம். இதனால் திமுகவுக்கு எதிரான தரப்பினர் சி.டி. மணியை பயன்படுத்தி வந்தனர். இந்த சி.டி. மணியின் கைத்தடிகளால் சென்னை போலீசார் உதவியுடன் போட்டுத் தள்ளப்பட்ட லோக்கல் ரவுடிகள் ஏராளம்.

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை
இந்த சி.டி. மணி 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது தமிழகத்தையே அதிர வைத்த திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் முக்கியமான புள்ளி ஒருவருக்காகவே ராமஜெயம் கொலை எனும் அசைன்மென்ட்டை சி.டி.ரவுடி செய்து முடித்ததாக போலீசார் சந்தேகித்தனர் அதனால் சி.டி. மணி விசாரிக்கப்பட்டார்.

கிடப்பில் ராமஜெயம் கொலை வழக்கு
ஆனால் சி.டி. மணியிடம் அதன்பின்னர் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. சி.டி. மணியும் சுதந்திரப் பறவையாகவே வழக்கம் போல தொழிலில் பிஸியாக இருந்து வந்தார். ராமஜெயம் கொலை வழக்கும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

சி.டி. மணி மீண்டும் கைது
இந்த நிலையில்தான் தற்போது திடீரென சி.டி. மணியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் சி.டி. மணியிடம் மீண்டும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கப் போகும் முக்கிய புள்ளி?
ராமஜெயத்தை படுகொலை செய்ய சி.டி. மணியை ஏவிட்ட முக்கிய புள்ளியின் பெயரை இந்த விசாரணையில் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் சி.டி. மணி தெரிவிக்க இருக்கும் தகவல்கள் தமிழகத்தில் மிகப் பெரும் அரசியல் அதிர்வுகளையே ஏற்படுத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications